இஸ்லாமும் சூரியனும்

இஸ்லாமிடம் சூரியனின் பெரும்பாடு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ!

அல்லாஹ்வின் உண்மை நல்லடியார்களே!

நாம் ஏறக்குறைய இந்த பருவத்தின் முன்பனிக்காலத்தின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டோம். அடுத்தது பின்பனிக்காலத்தின் மத்திலிருந்து வெயில் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது.  

காலை 8 மணிக்கெல்லாம்  வெயிலின் கொடுமை தனது வேலையைக் காட்டத் துவங்கி, நண்பகலின் உச்சத்தை அடைந்து சாலையில் நடந்து செல்வதே கடினம் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அத்துடன் அனல் காற்று வேறு!

வியர்வையில் குளித்து, உடலெல்லாம் பிசுப்பிப்பாகி, தாகத்தில் நாக்கு வெளியில் தள்ளி... நம்மை படாய்பாடுத்திட காத்திருக்கிறது இந்த வெயில். இதில் பெரும் துன்பம் பெண்களுக்குத்தான். எப்போதுமே உடல் முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால், தோல் பிரச்னைகள் சிறுநீர் கோளாறுகள் என்று அவர்களின் நிலைமை சிக்கலாகிவிடுகிறது. ஆனால்  புர்க்கா அணிந்து செல்வதால் எத்தகைய பாதிப்புகளிலிருந்தும்கூட பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அல்லாஹ்வும் ரஸூலும் நமக்குக் கற்றுத்தந்த விஷயங்கள்.



அல்லாஹ், தனது தூதரின் வாயிலாக வெளியிட்ட கட்டளைகளின் மகத்துவத்தை, கோடைவெயிலின் கொடுமையால் பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்பும் பெண்கள் துப்பட்டாவை தங்களைப் போர்த்திக்கொண்டு செல்வதை காணும் பொழுது நீங்களே உண்மையை அறிந்து கொள்ளலாம்.

மிகக் குறைவாக மழைபெறும்பகுதிகள், ஆறுகளே இல்லாத பாலவனப் பிரதேசங்களில் வெயிலின் கொடுமையைப்பற்றி சொல்லவே தேவையில்லை! அதேபோல குளிரின் தாக்கமும் இருக்கும்.

அன்றைய அரேபியர்களுக்கு இந்த பருவகால மாற்றங்கள் ஏன் நிகழ்கிறதென்பது புரியாத புதிராக இருந்தது. அன்று அவர்களுக்கு இருந்த வசதிவாய்ப்புகள் அவ்வளவுதான். இந்நிலையில், ஏழாம் நூற்றாண்டில் அவர்களுக்கு ஒரு மாபெரும் மனிதர் பொக்கிஷமாகக் கிடைத்ததார். அவர் இந்த பிரபஞ்சத்திற்கே சிறந்த முன்மாதிரியாக, தனது தூதராக, நேசராக, நம்மை நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டவராவார். மூக்கை எப்படிச் சிந்துவது என்பதிலிருந்து மலம் கழித்தால் எத்தனைக் கற்களை எப்படி உபயோகிப்பது என்பதுவரை எல்லாவற்றையும் அல்லாஹ்வின் அருளால் அரேபியர்களுக்கு மட்டுமல்லமல் அகில உலகத்திகும் இன்றுவரைகற்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அல்லாஹ், நமது கண்ணுமணி நாயகத்திற்கு அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், பொருளாதாரம், சட்டம், கட்டப்பஞ்சாயத்து, சாபம் விடுவது, என்பதோடு மண்ணைவாரித் தூற்றி எதிரிகளைத் தாக்குவது போன்ற அதிபயங்கரமான சண்டைப் பயிற்சிகளையும், கண்களை தோண்டியெடுப்பது, தலை, கை-கால்களை போன்ற மருத்தவமுறைகளைக் கூட கற்பித்திருக்கிறான்.
அன்றைய அரேபியர்களுக்கு மட்டுமல்ல இன்றும்கூட 150 கோடி முஃமின்களுக்கு நடமாடும் (நடமாடிய) பல்கலைக் கழகம். சிந்தையை தூண்டிடும் அவரது வார்த்தைகள் அண்டசராசரத்தையே ஆட்டம் காண வைத்தது. பருவகால மாற்றத்திற்கான காரணத்தை அவரிடம் அவரது அற்புத போதனைகளில் தேடாமல் நாம் வேறெங்கு தேடுவோம்?

சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் எப்பொழுது ஒரே போலத்தான் இருந்துவருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலகாலங்களில் பூமியில் வெப்பம் அதிகரிக்கின்றது; அதேபோல வெப்பம் குறைந்து குளிராகவும் இருக்கிறது. சூரியன் அவ்வப்பொழுது கூடுதலாகவோ அல்லது குறைத்தோ வெப்பத்தை வெளியிடுவதில்லை; அல்லாஹ் அதற்கு அப்படி எந்தவிதமானக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை எனும் பொழுது அதிகப்படியான வெப்பமும் குளிரும் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். 

பருவகால மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது?

ஸஹீஹ் புகாரி 537
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் முஸ்லிம் 1088
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வெப்பம் ஏற்படும்போது வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது" என்று கூறிவிட்டு, "நரகம் தனது இறைவனிடம் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு) முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதித்தான்" என்றும் குறிப்பிட்டார்கள்.

நரகம் விடும் பெரும்மூச்சுக் காற்றின் காரணமாகவே பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மிகப் பெரும் அறிவியல் உண்மையை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்தது. எந்த அறிவியல் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காத அற்புத விளக்கம்.

மாஷா அல்லாஹ்!

மூச்சுவிடுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையெனில் நரகம் மூச்சு திணறி இறந்துவிடும் என்பதை அறிந்த அல்லாஹ் அதற்கு அவ்வாறான ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியிருக்கிறான். இதிலிருந்து அல்லாஹ்வின் அளவற்ற கருணையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மாஷா அல்லாஹ்!

என்ன ஒரு அற்புதமான விளக்கம்! பாமரர்களுக்கும் புரியும் எளிய விளக்கம்!

ஆனால் அல்லாஹ் நமது பொண்ணுமணிக்கு கற்பித்துக் கொடுத்த அறிய பொக்கிஷங்களை அழிப்பதற்கென்றே இந்த காஃபிர் சைத்தான்கள் அறிவியல்(!) என்ற பெயரில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றனர். அவர்கள் எப்படியெல்லம் இட்டுக்கட்டி அப்பாவி மக்களை அறியாமையில் தள்ளுகிறார்கள் என்பதையும் கவனிப்போம்.

நாம் வசிக்கும் இந்த பூமி, ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறதாகவும், அது தன் அச்சில் கிட்டத்தட்ட 23½ பாகைகள் சாய்ந்திருக்கிறதென்றும் அபாண்டமான ஒரு பொய்யைதுவக்கப்பள்ளியில் கற்பிக்கிறார்கள்.



காஃபிர்களின் பொய்(!) இத்துடன் முடிவதில்லை, புவியின் தனது அச்சில் சாய்ந்திருப்பதால் சூரியனிலிருந்து ஒளிக்கதிர்கள் பூமியின் மீது நேராக விழும் பொழுது வெப்பம் அதிகமாகவும், சாய்வாக விழும் பொழுது வெப்பம் குறைவாகவும் இருக்குமாம்.பருவகால மாற்றத்திற்காக தாங்கள் கூறும் பொய்க்(!) காரணத்தை படம் வரைந்து விரிவாக விளக்குகின்றனர்.




காஃபிர்களின் இந்த விளக்கம் பொய்யானது!

ஏன் பொய்யாகிறது?

காஃபிர்கள் தங்களது விளக்கத்திற்கு ஆதரவாக ஒரு குர்ஆன் வசனத்தையோ அல்லது பலவீனமான ஒரு ஹதீஸைக் கூட காண்பித்ததில்லை; அவர்களால் காண்பிக்கவும் இயலாது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குக் கற்பித்துத் தராத எந்த ஒரு விஷயமும் பொய்தான்! இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு,  காஃபிர்கள் கூறும் அறிவியலைக் கற்பிக்க வேண்டிய இழிநிலையில் இருக்கின்றனர். காஃபிகள் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் வேறுவழியில்லாமல் கற்றுக் கொள்வதைக் கூட மன்னித்துவிடலாம்

முஃமின்களின்  நிர்வாகத்தின் கீழிலிருக்கும் பள்ளிக்கூடங்களிலும் இதே கொடுமைதான். இதை எப்படி மன்னிப்பது?

அறிவியல் என்ற பெயரில் காஃபிர்கள் கூறுவதை நம்பி, அதைக் குர்ஆனுக்குள் நுழைத்து தங்களது செயலுக்கு நியாயம் தேடும் பெயர்தாங்கி முஸ்லீம்களை எப்படி மன்னிக்க முடியும்?

நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை முஃமின்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது ரஸூலும் கூறிய உன்னத போதனைகளை சிறுகச் சிறுக அழித்து, இஸ்லாமை அடியோடு அழிக்க  யூதர்கள் செய்யும் சதித்திட்டம்தான் இவைகள்!

நேரான கதிர்களாம் கடுமையான வெப்பமாம்!  கடுமையான வெப்பத்தைக் கொடுப்பது சூரியனுக்குக் கடமையாக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!  அல்லாஹ்விற்கு ஸுஜூது செய்வதற்காக(22:18), நிழலுக்கு ஆதாரமாக (25:45), இரவு பகல் வேறுபாட்டையும், காலத்தையும் அறிந்து கொள்வதற்காக(6:96) பிரகாசமான (10:05) விளக்காக (25:61, 71:16, 78:13)இருப்பதற்காவே சூரியனைப் படைத்திருக்கிறான். இத்தனை செய்திகளைக் கூறும் அல்லாஹ்விற்கும், கண்மணி நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைவலஸல்லம் அவர்களுக்கும், கடுமையான வெப்பமும் குளிரும் பூமியில் எதனால் உண்டாகிறதென்பது தெரியாதா?

சூரியனை அல்லாஹ் படைத்தானா? இல்லை இந்த காஃபிர்களும், பெயர் தாங்கி முஸ்லீம்களும் படைத்தார்களா?

சூரியனின் காரணமாகத்தான் பூமியில் கடுமையான வெப்பமும், கடுமையான குளிரும் உண்டாகிறதென்பதற்கு சான்றாக, அறிவியல் என்ற பெயரில் இட்டுக்கட்டும் காஃபிர்களும் அவர்களது கருத்திற்கு வால் பிடிக்கும் பெயர்தாங்கி முஸ்லீம்களாலும் ஒரு குர்ஆன் வசனத்தைக் கூட காண்பிக்க முடியாது! ஹதீஸ்களிலும் காண்பிக்க முடியாது! நரகம் விடும் மூச்சுக் காற்றினால்தான் கோடை காலத்தில் நாம் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நாம் உணரும் கடும் குளிரும் உண்டாகிறதென்பதை இதைவிட எப்படி இந்த காஃபிர்களுக்கு விளக்குவது? அதுமட்டுமல்ல நரகத்தின் கடுமையான வெப்பத்தினால்தான் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாகிறதென்கிற(புகாரி 3262,3263,3264) மருத்துவ உண்மையை இந்த பெயர்தாங்கிகள் என்று உணரப் போகிறார்களோ?

இந்த சூரியன் நாளை கியாமத்து நாளில் என்னவாகப் போகிறது தெரியுமா?

குர்ஆன் 81:1
சூரியன் சுருட்டப்படும் போது.

சூரியனை எப்படிச் சுருட்ட முடியும்? சுருட்டுவதற்கு அதென்ன பத்தமடை பாயா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். காஃபிர்களின் அறிவியல் போதனைகள் உங்கள் மனதில் பதிந்திருப்பதே இதற்குக் காரணம்.

சூரியனை ஏன் சுருட்ட முடியாது?

வட்ட வடிவிலிருக்கும் தோசை, சப்பாத்தி, பூரி போன்றவைகளை சுருட்டி வயிற்றுக்குள் தள்ளி ஏப்பம் விடுவதில்லையா? அதைபோல அல்லாஹ் கியாமத்து நாளில் சூரியனைச் சுருட்டிவிடுவான்.  

கோள வடிவிலிருக்கும் ஒரு பொருளை எப்படிச் சுருட்ட முடியும் என்பதுதானே உங்கள் கேள்வி?  சூரியன் கோளவடிவில் இருப்பதாகச் சொல்வதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் எந்த ஆதரமும் கிடையாது. நான் முன்பே கூறியதைப் போல் குர்ஆன்-ஹதீஸீல் சொல்லப்படாத, அல்லாஹ்வும்-ரஸூலும் நமக்குக் கற்பித்துத் தராத ஒரு செய்தியை எப்படி ஏற்க முடியும்?

குர்ஆனிலும் ஹதீஸ்களில் சொல்லப்படாத விஷயங்களே இல்லையென்பதை, பாவம் இந்த காஃபிர்கள் எப்படி அறிவார்கள்?

அவர்களுக்கு நல்ல அறிவை வழங்க அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்!

மௌலான மௌலவி பாஸில் பாகவி சிராஜி ரஷாதி தாவூதி இம்தாதி பிஜெ.