அல்லாஹ்வின் மகன் ஈஸா(மஸீஹ்)?-3

அல்லாஹ்வின் மகன்!(?)-3


கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் வாரிசு என்ற கோரிக்கையை முவைத்த பொழுது, அதை மறுக்கும் விதமாக இப்படியொரு எதிர்க் கேள்வியை அல்லாஹ்(!) முன் வைக்கிறான்.

குர்ஆன் 6:101
..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அரபி ஒலிபெயர்ப்பு:
..annā yakūnu lahu waladun walam takun lahu ṣāḥibatun

அல்லாஹ்வைப்பற்றிய முஹம்மதின் கற்பனை எவ்வாறு இருந்ததென்பதை இக் குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. இதில் ṣāḥibatun என்ற சொல்லை நமது தமிழக முல்லாக்கள் மனைவி என்று மொழிபெயர்த்திருக்கின்றனர். ṣāḥibatun என்பதற்கு ‘தோழி‘ என்பதுதான் நேரடிப் பொருள். ஆங்கிலத்தில் கூறினால்‚ ‘girl friend’’ என்று சொல்லலாம். அல்லது திருமணபந்தமின்றி சேர்ந்து வாழும் ஒரு இணை என்று சொல்லலாம். 

அல்லாஹ்விற்கு தோழியா?

நாம் இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும் அல்லாஹ் ஒரு ஆண்பால்தான்! இல்லையெனில் தனக்கொரு மகனைப் பெற்றுத்தர பெண்ணின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை! சர்வ வல்லமையுடையவனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்பவனால், பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையாம்!

குர்ஆன் 6:102 நம்மிடம் கேட்கும் கேள்வியின் பொருள், அவன் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளாத நிலையில் அவனுக்கு எப்படி மகன் இருக்க முடியும்? மேலும் ஒரு பெண்ணின் உதவியின்றி தன்னால், தனக்கு ஒரு வாரிசை உருவாக இயலாதென்பதுதான் அல்லாஹ் இங்கு தரும் வாக்குமூலம்!

ஆம்!

அல்லாஹ்வும் அப்படித்தான் நினைக்கிறான். ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு, விந்தைச் செலுத்தி, அதன் மூலம் அப்பெண் கருத்தரித்து, கருவளர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டுமே அது தனது குழந்தையாக இருக்க முடியும் என்ற மனித சிந்தனையைக் கடந்து அல்லாஹ்வினால்(!) சிந்திக்க முடியவில்லை!

வானங்களையும், பூமியையும், மலக்குகள், ஜின்கள், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள், ஆதாம், ஹவ்வா(ஏவாள்).... இன்னும் எண்ணற்றவைகளை பிறரின் உதவியின்றி, முன்மாதியின்றி படைத்ததாக பீற்றிக் கொள்ளும் ஒரு கடவுளால், ஒரு பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்க முடியவில்லையாம். இதுதான் குர்ஆன் 6:101 நமக்குக் கூறும் செய்தி!

தன்னைக் கையாலாகாதவன் என்று எவரும் நினைத்து விடக் கூடாதென்பதற்காக, தனக்கு சர்வ வல்லமை இருப்பதாக அல்லாஹ் அறிவித்துக் கொள்ளும் ஒரு வசனத்தைக் காண்போம்.

குர்ஆன் 16:40
ஒன்றை நாம் நாடினால் "ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.

படைப்பின் ஆரம்பத்தைப்பற்றியும், நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் இயேசுவின் உருவக்கம் பற்றிய குர்ஆனின் கதையாடல்களை வாசித்தவர்களுக்கு இது ஒரு அர்த்தமற்ற பீற்றல் என்பது புரியும்! ஈஸாவின் உருவாக்கம்பற்றிக் கூறும் பொழுது,

குர்ஆன் 66:12
இம்ரானின் மகள் மர்யமையும் அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம்...

அல்லாஹ், தனது இருக்கையில் ’ஸ்டைலாக’ அமர்ந்தவாறு ’குன்’ (ஆகுக) என்று கூறியிருக்கலாமே? அதைவிடுத்து மர்யமிடம் சென்று எதற்காக தனது உயிரை ஊதவேண்டும்? 

உண்மையில், ’குன்’ என்ற வெற்றுச் சொல்லால் அல்லாஹ்(!) எதையுமே உருவாக்கியதில்லை. அப்படி உருவாக்கியதற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. அல்லாஹ் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் எந்தப் படைப்பையோ அல்லது அழிவுகளையோ ’குன்’ என்ற சொல்லால் உடனடியாக நிகழ்த்திடவில்லை.

உதாரணத்திற்கு, இணைந்திருந்தாக அல்லாஹ் கூறும் வானங்களையும் பூமிகளையும் (நன்கு கவனிக்கவும் பூமியை மட்டும்) பிரித்து அமைப்பதற்கு ஆறு(எட்டு!?) நாட்கள் தேவைப்பட்டதாம். அந்த பூமியில் தனது பிரதிநிதியாக ஆதாமைப் படைக்க, தூசி/ஈரமண்/களிமண்/தட்டினால் ஓசை தரும் களிமண் என்ற ஏதோ ஒரு பொருளை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ் தனது இரண்டு கைகளால் மண்ணைப் பிசைந்து, உருட்டித் திரட்டி, வடிவமைத்து உயிரை ஊதி உருவாக்க வேண்டியிருந்தது. நூஹ் நபி காலத்தில் அவரது எதிரிகளை அழிக்க பெரும் வெள்ளம் தேவைப்பட்டது; பெரும் வெள்ளத்திற்காக மழையைப் பொழிவித்தும், நிலத்தில் ஊற்றைப் பெருகச் செய்தும்; அதனால் பூமியை நீரால் நிறைக்க வேண்டியிருந்தது; அவ்வெள்ளத்திலிருந்து தனது படைப்புகளைக் காப்பாற்றி, உயிரினங்களைத் தழைக்கச் செய்ய கப்பல் தேவைப்பட்டதாம்; அந்தக் கப்பலைச் செய்ய நூஹ் நபியின் உதவி தேவைப்பட்டது; ... இப்படி.. இன்னும்... நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ஒவ்வொன்றும் நிகழ நிறைய கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது இவற்றில் எதுவும் உடனடியாக நிகழவில்லை.

ஈஸா/இயேசுவின் உருவாக்கத்தால் மர்யமின் கற்பின் மீது விழுந்த கேள்விக்குறியை மறுக்கும் விதமாக அல்லாஹ் கூறும் பொழுது,

குர் ஆன் 3:59
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

குர்ஆனின் மூன்றாம் அத்தியாயமாக இருக்கும் ஆலு இம்ரான், முஹம்மது மதீனாவில் கூறியது. அவர், தன் வாழ்வின் கணிசமான பகுதியை, அதாவது சுமார் 23 ஆண்டுகள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். கால இடைவெளி அவருக்கு மறதியை உண்டாக்கி விட்டது. மறதி என்பது வழக்கமான மனித இயல்புதான். ஆனால் அவர் மக்காவில் முன்பு வெளியிட்ட அத்தியாயங்களை வாசித்தால் முரண்பாடுகள் எளிதாகப் புரியும். ஆதமின் படைப்பைப் பற்றி முன்பு கூறியதை கவனியுங்கள்,

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

எனது கேள்வி என்னவென்றால், அல்லாஹ், ஆதமை மண்ணால் உருவமைத்து தனது உயிரை ஊதி உருவாக்கினானா? அல்லது மண் பொம்மையாக இருந்த ஆதாமிடம் ’குன்’ என்று கூறியவுடன் உயிர்பெற்றதா? நான் தற்சமயம் இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

ஈஸா, ‘குன்’ என்ற சொல்லால் உருவானவரல்ல! அவரை உருவாக்க ஒரு வானவர்(?), தனிமையிலிருந்த மர்யமைச் சந்தித்து ஊதித் தள்ள வேண்டியிருந்தது. அவர் கருவுற்று, கருவைச் சுமந்து, கரு வளர்ச்சியடையும் வரை 9-10 மாதகாலம் காத்திருந்து, வேதனைகளைத் சகித்துக்கொண்டு, ஈஸாவைப் பிரசவிக்க வேண்டியிருந்தது. ’குன்’ என்ற சொல்லால் அல்லாஹ் எதையும் உடனே உருவாக்கியதாக குர்ஆனில் ஆதாரமில்லை. எனவே ’குன்’ என்றால் ’பிம்பிளிக்கி பிலாப்பி !’

நாம் மர்யமின் கதையைத் தொடர்வோம்..

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக ( بَشَرٌ-basharan-adult male) அவருக்குத் தோற்றமளித்தார்.

குர்ஆன் 19:18
"நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

குர்ஆன் 3.45
"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ்வின் ரூஹ் (உயிர்) ஒரு ஆணின் வடிவத்தில் மர்யமிடம் செல்கிறது; அது ஒரு ரூஹ்ஹை ஊதுகிறது. இது நமது முஹம்மது அவர்கள் மக்காவிலிருக்கும் பொழுது கூறியது. அவர் மதீனாவிற்குச் சென்றவுடன் ஒருமையிலிருந்த ரூஹ், மலக்குகளாகப்(குர்ஆன் 3.45) பன்மை வடிவம் பெறுகிறது என்பதை கவனிக்கவும். ஈஸா பற்றிய அறிவிப்பை, மர்யமிடம் தெரிவிக்கச் சென்றது சென்றது அல்லாஹ்வின் ஒரு ரூஹ்ஹா? அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மலக்குகளா? இதை நாம் அல்லாஹ்வின் உயிர்கள் மர்யமிடம் சென்றது என்று சொல்லலாமா? இதைப்பற்றி பிறகு விவாதிப்போம். முதலில் அல்லாஹ்வின் ஒரு உயிர்(ரூஹ்) அதாவது ரூஹுல் குத்தூஸ் என்ற பரிசுத்த ஆவி செய்த செயலைப்பற்றிக் காண்போம்.

தொடரும்...


தஜ்ஜால்