அல்லாஹ்வின் மகன் ஈஸா(மஸீஹ்)?-5

அல்லாஹ்வின் மகன்!(?)-5



உண்மையில் பரித்த ஆவி என்பது என்ன அல்லது யார்?

பரிசுத்த ஆவி என்பது ஜிப்ரீல் என்ற வானவரைக் குறிப்பிடுவதை முன்பே பார்த்தோம். இது நமது கருத்தல்ல; முஸ்லீம்களின் ஏகோபித்த முடிவை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

கிறிஸ்தவத்தில் கடவுளின் மூன்றில் பகுதியாக, தன்மையாக பரிசுத்த ஆவியைக் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று இணையாது; வெவ்வேறு; தனித்தும் செயல்படக் கூடியது ஆனால் ஒன்றுதான் (சரிதானா?) இஸ்லாமைப் பொருத்த வரையில் பரிசுத்த ஆவி என்ற சொல்லே அந்நியமானது. உயிரைக் குறிப்பிட ”ரூஹ்” என்ற பதம் இருந்தாலும் ”ரூஹுல் குத்தூஸ்” என்ற பதம் குறிப்பாக ஈஸாவின் உருவாக்கம் பற்றி கூறப்படும் பொழுது மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூஹ்பற்றி அதாவது உயிர்களின் உருவக்கம்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறதென்பதை சிறிது கவனித்துவிட்டு ”ரூஹுல் குத்தூஸ்” எனப்படும் பரிசுத்த உயிரிடம் திரும்பலாம்.

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின், உடலுக்குள் அல்லாஹ் தனது உயிரை ஊதினானாம்.

அல்லாஹ்வின் உயிர் என்பதைப்பற்றி அண்ணன் பீஜே தரும் விளக்கத்தை “அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!” என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம் அதில் அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்.

இறைவனின் உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

இதன் பொருள் என்னவென்றால், அல்லாஹ்விடமிருக்கும் நிறைய, எண்ணற்ற உயிர்களிலிருந்து ஆதாமிற்கான உயிரை அல்லாஹ் தனக்குள் வாங்கிக் கொண்டு, களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின் உடலுக்குள் ஊதி செலுத்தினான் என்பதுதான் அண்ணன் பீஜே இங்கு கூறவிழைவது.

இதன் மூலம் படைப்பைத் துவங்குவதற்கு முன்பே மனிதர்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, நுண்ணுயிர்கள், கிருமிகள் என அனைத்து உயிர்களும் விதியுடன் தயார் நிலையில் இருந்திருக்கிறது என்பதை இவர்கள் ஏற்கவேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தல்ல. ஃபழிலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யிது அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலி தவ்வல்லாஹு ஹயாதஹு (இருங்கள்.. சற்று மூச்சு விட்டுக் கொள்கிறேன். இனி என்னால் முடியாது எனவே இவரது பெயரை மௌலானா அஸீஸ் என்று அழைத்துக் கொள்வோம்) என்பவர் எழுதிய “தப்ஸீர் ஆயத் அந்நூர்” என்ற நூலின் படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.










 நமது மௌலாலான அஸீஸ் சொல்வது அவரது தனிப்பட்டகருத்தல்ல. இதை அண்ணன் பீஜேவும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?
ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவரைத் தான் அல்லாஹ் வெளியேற்றினான். "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று ஏன் திருக் குர்ஆனின் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.
உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆதமுடைய மக்களின் முதுகுகளி லிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' என்று கேட்ட செய்தி திருக்குர்ஆன் 7:172 வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நம்முடன் விவாதிக்க இஸ்லாமியர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகளுமில்லை என்பதற்கு விதியைப் பற்றிய இந்த விளக்கமே போதுமானது. இருப்பினும் குர்ஆனின் இதர உளறல்களை இஸ்லாமியர்களும், மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே நாம் மற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறோம். எனவே விதியைப்பற்றி மேற்கொண்டு நான் இங்கு தொடர விரும்பவில்லை. செத்த பாம்பை எதற்காக அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? நமது கவனத்தை உயிர்களைப்பற்றிய இஸ்லாமின் குழப்பத்திற்கு மீண்டும் செலுத்துவோம்.

குர்ஆன் 17:85
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

உயிர்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்கிறான் அல்லாஹ். ஆனால் முல்லாக்களோ அடித்து விளாசுகிறார்கள். உயிர்கள் வைக்கப்படும் கூட்டை அதாவது உடலை அல்லாஹ் எவ்வாறு உருவாக்குகிறான் என்பதையும் காணலாம்.

களிமண் தொழில் நுட்பத்தை நீங்கள் அறிவீர்கள் அந்தச் செயல்முறை நிறைய சிக்கல் நிறைந்தது போலும், அதனால் ஆதாமுடன் அந்த தொழில்நுட்பத்தை நிறுத்திய அல்லாஹ், புதிய தொழில் நுட்பத்தை செயல் படுத்துகிறான்.

குர்ஆன் 32:8
பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.

குர்ஆன் 32:9
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

குர்ஆன் 75:37
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?

ஆண்-பெண் இணையும் பொழுது, ஆணின் விந்து சத்திலிருந்து ஒரு உயிரற்ற ஜடப் பொருள் அல்லது சதைக்கட்டி மட்டுமே உருவாகிறது. எப்படி உருவாகிறது? அல்லாஹ் உருவாக்குகிறான். அது பெண்ணின் கர்பப்பையில் வைத்து, சீரமைக்கப்படுகிறது; அதன் பிறகு அந்த உடலினுள் உயிர் ஊதப்படுகிறது. இவ்வாறுதான் ஒரு பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. இதைத் தவிர உயிர்கள் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு எதுவுமில்லை என்பதுதான் அல்லாஹ்வின் முடிவு!

புகாரி 318
'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆனால் குர்ஆனின் இன்னொரு வசனம் வேறொரு செய்தியைக் கூறுகிறது. இது அல்லாஹ்வின் அறிவு அடுத்தகட்ட வளர்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. முன்பு பார்த்த 32:8,9, 75:37 ஆகிய குர்ஆன் வசனங்கள் மெக்கவிலிருந்த பொழுது கூறியவைகள். இது மதீனா வெளியீடு.

குர்ஆன் 76:2
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...

அதென்ன கலப்பான விந்துத் துளி?

புகாரி 130
'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இதற்கு மேலும் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆணின் விந்து, பெண்ணின் கர்பப்பையிள் சென்று தங்கிவிடுகிறது; அதன் பிறகு ஒரு வானவர் வந்து அமர்ந்து கொண்டு அல்லாவிற்கு நேரடி ஒலிபரப்பைத் துவங்குகிறார். என்னே அறிவியல்... என்னே அறிவியல்... எனக்கு ஒரே புல்லரிப்பாக இருக்கிறது, கொஞ்சம் பொருத்திருங்கள்.... சாம்பலைத் தேய்த்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

தொடரும்

@தஜ்ஜால்

தஜ்ஜால்