இஸ்லாமிடம் பூமி படும்பாடு
குர்ஆனில் அறிவியல் முன்னறிவிப்புகள் என்ற முல்லாக்களின் கட்டுக்கதைகள் ஒவ்வொன்றும் ஆதாரங்களுடன் மிகத்தெளிவாக பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இஸ்லாமிய மதவாதிகள் தங்களது தக்கியாவைக் கைவிடுவதில்லை. மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்களிடம் அவர்கள், ‘தாவா’ பணிகளில் ஈடுபடும்பொழுது முன்னிலை வகிப்பதும் இந்தக் கட்டுக்கதைகள்தான். உதாரணத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தினர் திராவிடர் கழகத்தினருடனும், கிருஸ்தவர்களுடன் நிகழ்த்திய விவாதங்களிலும்கூட குர்ஆனில் அறிவியல் முன்னறிவிப்புகள் என்ற கட்டுக்கதைகளையே பிரதானமாக முன்வைத்தனர். குர்ஆன் கடவுளின் வார்த்தை என்பதை நிரூபிக்க, அறிவியலின் தயவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையே இது காண்பிக்கிறது.
அறிவியல் அவர்களின் கட்டுக்கதைகளுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்காதே? எனவே அறிவியலுக்கு ஏற்றவாறு குர்ஆனை நெளித்து வளைத்து இறுதியில் பூமிக்கே ஆப்பு அடித்துவிட்டனர்.
குர் ஆன் 78:7
Waljiba la awtada
மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
முளைகளைப்பற்றி கவனிப்பதற்கு முன், மலைகளின் தேவை எதற்காக என்பதைக் கூறும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும் காண்போம்
குர் ஆன் 31:10
... waalqa fee al-ardi rawasiya an tameeda bikum ...
பீஜே:
…உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.
நிஜாமுத்தீன் மன்பயீ
பூமியில் - உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்க - உயர்ந்த மலைகளை அமைத்தான்;
இக்பால் மதனி
பூமியில் - அது உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்கும் பொருட்டு, அசையாத மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான்….
ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
...பூமியில் அது உங்களைக்கொண்டு அசைந்துவிடாதிருக்கும் பொருட்டு, உயர்ந்த மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான்.
முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
...உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன்மேல் உறுதியாக நிறுத்தினான்... (இதை மொழிபெயர்த்தவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை rawasiya (மலை) என்ற சொல்லை விட்டுவிட்டார்)
அ.கா அப்துல் ஹமீது பாகவி
...பூமி உங்களை கவிழ்த்துவிடாதிருக்கும் பொருட்டு (நிலையான) மலைகளை அதில் நாட்டிவைத்து,. (கோள வடிவத்தை எப்படிக் கவிழ்ப்பது?)
முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
உங்களை அது நீட்டிவிடும் என்பதால், பூமியில் மலைகளைப் போட்டார்...
குர்ஆன் – இறுதி ஏற்பாடு-ரஷாத் கலீபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
...உங்களோடு சேர்ந்து பூமி உருண்டுவிடாதிருக்கும் பொருட்டு அதன் மீது நிலைபடுத்துபவைகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார்...
தென்காசி, இ.எம். அப்துர் ரஹ்மான்
...உங்களை சாய்த்து விடாமலிருப்பதற்காக (ஆணிகளைப் போன்று) பூமியில் பளுவான மலைகளையும் போட்டுவைத்தான்... (கோள வடிவத்தை எப்படிச் சாய்ப்பது?)
குர்ஆன் 15:19,
Waal-arda madadnaha waalqayna feeha rawasiya waanbatna feeha min kulli shay-in mawzoonin
பீஜே:
பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம்
ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
பூமியை அதை நாம் விரித்து, அதில் அசையாத (உறுதிமிக்க) மலைகளை நிலைபடுத்தினோம்...
முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
பூமியை நீட்டினோம். அதில் மலைகளைப் போட்டோம்.
வி.எம்.ஏ.பாட்சா ஜான்
மேலும் நாம் பூமியை விசாலப்படுத்தி இருக்கிறோம். இன்னும் அதில் மலைகளை உறுதியாக (நிலைத்து நிற்கும்படி) செய்திருக்றோம்.
குர்ஆன் 16:15
Waalqa fee al-ardi rawasiya an tameeda bikum
பீஜே:
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்
ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
உங்களைக்கொண்டு அசையாதிருப்பதற்காக, பூமியின்மீது உறுதியான மலைகளை அமைத்தான்
முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக, அவன் அதன் மேல் மலைகளை (அதன் மீது) உறுதியாக நிறுத்தினான்
அ.கா அப்துல் ஹமீது பாகவி
உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான்.
முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
பூமியில் – அது உங்களை சாய்த்துவிடும் என்பதால் மலைகளை வைத்தார்
குர் ஆன் 21:31
WajaAAalna fee al-ardi rawasiya an tameeda bihim
நிஜாமுத்தீன் மன்பயீ
இன்னும், பூமியில் உறுதியான மலைகளை-அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடமலிருப்பதற்காக - நாம் அமைத்தோம்;
ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
இன்னும், பூமியில் (மனிதர்களாகிய) அவர்களைக் கொண்டு அசைந்துவிடா திருப்பதற்காக, உறுதியான மலைகளை நாம் உண்டாக்கினோம்
முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
இன்னும், இப்பூமி (மனிதர்களுடன்) ஆடிச்சாயாமலிருக்குத் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைதோம்
தென்காசி, இ.எம். அப்துர் ரஹ்மான்
(மனிதர்களாகிய) அவர்களுடன் அசைந்து (சாய்ந்து) விடாமலிருப்பதற்காக பூமியில் ஆணிகளைப் போன்று, பளுவான மலைகளை நாம் ஏற்படுத்தினோம்
பீஜே மொழிபெயர்ப்பு,
பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளைஏற்படுத்தினோம்.
நாம் பார்த்த மொழிபெயர்ப்புகள் ஒன்றுக்கொன்று புதிய பொருளைத் தருகின்றன. அவற்றிலிருந்து நமக்கு கிடைத்த முடிவுகள்.
· மனிதர்களுடன் பூமி அசையாமலிருக்க மலைகளை அல்லாஹ் படைத்தான். அதாவது பூமிக்கு சமநிலை எடையாக (Counter weight) மலைகள் உள்ளன.
· மனிதர்களால் பூமி அசைந்து விடாமல் இருப்பதற்கு
· பூமி, மனிதர்களை அசைத்து விடாமல் இருப்பதற்கு
· பூமி, மனிதர்களை கவிழ்த்து விடாமல் இருப்பதற்கு
· பூமி, மனிதர்களை சாய்த்து விடாமலிருப்பதற்கு
· பூமியின் மீது மலைகள் நடப்பட்டுள்ளன
· பூமியின் மீது மலைகள் போடப்பட்டுள்ளன
இவற்றில் குர்ஆன் 78:07-ல் மட்டுமே மலைகளை ’awtada’ (ஆப்பு, முளை) என்ற சொல்லால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மலைகளைக் குறிக்க ’rawasiya’ (உறுதியான மலைகள்) என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
அறிஞர் பீஜே ’rawasiya’ (உறுதியான மலைகள்) என்ற சொல்லை, முளை என்று திரித்து குர்ஆனுக்கு ஆப்பு அடித்திருக்கிறார். பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பை, குர்ஆனைத் தழுவி எழுதப்பட்ட ஒரு புத்தகமாகத்தான் கருதவேண்டியுள்ளது. விவாதங்களில் ஹதீஸ்கள் தங்களுக்கு எதிராக இருக்கும் பொழுது, குர்ஆனுக்கு முரண்படும் எல்லாவற்றையும் புறக்கணிப்பதாகக் கூறும் பீஜே மற்றும் அவரது ’விசிலடிச்சான் குஞ்சுகள்’, இட்டுக்கட்டப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குவது பித்அத் என்று போர்க்கொடி தூக்குபவர்கள், குர்ஆன் இல்லாத கருத்தை இட்டுக்கட்டி கூறுவதை என்னவென்று சொல்வார்கள்?
பீஜேவின் மொழிபெயர்ப்பு மற்றவர்களுடன் முரண்படுவதை இங்கு நீங்கள் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு, நாம் கண்ட குர் ஆன் வசனங்களில் வரும் ’bihim’ மற்றும் ’bikum’ என்ற சொற்களை திரித்து அதன் பொருளை மாற்றியிருக்கிறார். இதன் பொருள் முறையே ’உங்களால்’ மற்றும் ‘அவர்களால்’ என்றுவரும். கே.ஏ நிஜாமுத்தீன், இக்பால் மதனி,ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி போன்றவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர். ’உங்களால்/அவர்களால்’ அல்லது ’உங்களைக் கொண்டு/அவர்களைக் கொண்டு’ என்று குறிப்பிடப்படுவது மனிதர்களைத்தான். அவர்களால் பூமியை அசைக்க முடியுமா? என்ற கேள்வியிலிருந்து தப்பிக்க நினைத்த மொழிபெயர்ப்பாளர்கள், தலைகீழாக குர்ஆனின் பொருளைத் திரித்துவிட்டனர்.
நாம் அவர்களது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதால், அப்படியும் பொருள் கொள்ளலாம் என்றொரு சப்பைக்கட்டை நாம் எதிர்பார்க்கலாம். அதாவது ’பூவை’, ’பூ’ என்றும் சொல்லலாம், ’புய்ப்பம்’ என்றும் சொல்லலாம் நீங்கள் சொல்வதைப் போலவும் சொல்லலாம் என்று கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைக் காட்சியை கண்முன்னே கொண்டுவருவார்கள்!
நாம், அல்லாஹ் அடித்த ஆப்பு என்னவாயிற்று என்பதை கவனிப்போம்!
குர் ஆன் 78:7
Waljiba la awtada
மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
Awtada – ஆப்பு, முளை, கூரான மரமுனை
குர்ஆன் 41:10
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான்...
அல்லாஹ் பூமியைப் படைத்தபிறகு நான்கு நாட்களில் அதன் மலைகளை முளைகளாக போட்டு, அறைந்து, நிலைநாட்டியிருப்பது எதற்காக என்பதை, நமது இஸ்லாமிய விஞ்ஞானிகள் தரும் அறிவியல் விளக்கங்களைக் காண்போம்.
பூமிக்கு முளைகளாக மலைகள் பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும். ...
onlinepj.com

ஆப்பு ஒரு முக்கோண வடிவிலான, எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாய்தளம். மரச்சட்டங்களை இணைப்பதற்கும், ஒரு பொருளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கும், பொருளொன்றை உயர்த்துவதற்கும், ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் தாங்கி வைத்திருப்பதற்கும், எல்லைகளை குறிப்பிடவும் ஆப்பு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துச் செல்லக்கூடிய பொறிவகைகளுள் ஒன்று. இதன் அகன்ற மேல்முனையில் கொடுக்கப்படும் விசையை சாய்ந்த மேற்பரப்புகளுக்குச் செங்குத்துத்தாக பக்கவாட்டு திசையில் மாற்றுவதன் மூலம் இது செயல்படுகிறது.
இதன் அடிப்படையில் நோக்கினால் மலைகளை மேலிருந்து புவியின் உட்புறத்திற்கு அறையப்பட்டு பக்கச் சுவர்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.
... இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவை யாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது. இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங் களெல்லாம் நொறுங்கி விடும். இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காக மலைகள், பூமியின் மேலே நாம் பார்க்கும் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் அறையப்பட்டுள்ளன. ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது. இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.
அறிவியலுடன் ஒப்பிட்டுப் பேசும் தகுதி, குர்ஆனுக்கு இருக்கிறதா இல்லையா என்பதப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், குர்ஆனின் தெளிவற்றதன்மையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கிடைக்கின்ற சந்துபொந்துகளிலிருந்து அறிவியலை வாரிக் குவிக்கின்றனர்.
புவியின் உட்பகுதியில் வெவ்வேறு அடுக்குகள் ஒன்றையொன்று பிரிந்து விடாமல் இருப்பது அல்லாஹ் அடித்து நிலைப்படுத்தியுள்ள முளைகளால் மட்டுமே சாத்தியப்படுகிறதா?
இதற்கான பதிலைக் காண்பதற்குமுன், பூமி, என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கவனிப்போம்
பூமி என்பது அறிவியல் கூறுவது போல சூரியக் குடும்பத்திலிருக்கும் ஒரு கிரகத்தைக் குறிப்பிடுகிறது என்று அவர்கள் கூறினால்,
இப்பிரபஞ்சத்தில் ஆடமல், அசையாமல், நகராமல், சுழலாமல் இயக்கமற்ற நிலையில் எந்த நட்சத்திரங்களோ, கோள்களோ, நிலப்பரப்போ இல்லை என்று சொல்லலாம். பூமியை ஆடாமல், அசையாமல், சாயாமல், கவிழாமல் இருப்பதற்கு மலைகள் என்ற ஆப்பு அடித்து நிலைப்படுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறுவது, பூமி, மணிக்கு 1670 கிலோமீட்டர்கள் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, 365.25 நாட்களில் சூரியனையும் சுற்றி வருகிறது எனும் இரண்டாம் வகுப்பு, அடிப்படை அறிவியல் பாடத்திற்கு எதிராக இருக்கிறது.
மனிதர்கள் தூக்கி எறிப்படாமல் இருப்பதற்கும், கட்டிடங்கள் நொறுக்கி விடாமலும் இருப்பதற்காகவே மலைகள் முளைகளாக அறையப்பட்டுள்ளன என்ற கூற்று முதிர்ச்சியற்றது. ஏனெனில், பூமி மட்டுமல்லது ஒவ்வொரு கிரகங்களிலும் மலைகளும் மேடுபள்ளங்களும் இருப்பதை இஸ்லாமிய விஞ்ஞானிகள் அறியவில்லை போலும்! மனிதர்களோ, கட்டிடங்களோ இல்லாத கோள்களிலும் துணைக் கோள்களிலும் மலைகள் ஏன்? அவற்றின் மீது ஆப்புகளை அறைந்தது யார்?
குர்ஆனுக்கு பூமியைத் தவிர குறிப்பாக அரேபிய தீபற்பத்தைத் கடந்து பேசத் தெரியாது. அதனிடம் மற்ற கிரகங்களைப்பற்றி பேசுவது பொருத்தமற்றது.
அவர்கள் பூமி என்று குறிப்பிடுவது, புவியின் மேற்பரப்பைக் குறிப்பிடுவதாகக் கொள்வோம்.
மலைகள், புவியின் மேற்பரப்பை உட்பகுதிகளிலுள்ள அடுக்குகளிலிருந்து ஒன்றையொன்று பிரிந்துவிடாமல் தடுக்கின்றனவா? புவியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகள், மேடு பள்ளங்கள் ஆகியன அல்லாஹ் முளைகளக அறைந்து உருவாக்கியவைகளா?

இஸ்லாமிய விஞ்ஞானிகள் சொல்வதைப்போன்று மலைகள் புவியின் அடுக்குகளை ஊடுருவிச் செல்லவில்லையென்பதை படத்தைப் பார்த்தவுடனே எவராலும் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ் முளைய சரிவர அறையவில்லை(?!)
புவியின் மேல் ஓடும் அதனை ஒட்டிய பாறை அடுக்கும்(Crust) லித்தோஸ்பியர் மேண்டிலும் (Lithosphere mantle) லித்தோஸ்பியர் எனப்படுகிறது. இதன் ஆழம் 10 முதல் 150 கிமீ வரை வேறுபடுகிறது. அடுத்தது மேற்புற அடுக்கு (Upper mantle) ஒலிவைன் சிலிகேட் தனிமங்களாலான எஸ்தனோஸ்பியர் (Asthonosphere) அடுத்தது, அடர்த்தி மிகுந்த ஒலிவைன் இரும்பு மக்னீசியம் சிலிகேட்டால் ஆன உட்புற பாறைப்படிமம். அடுத்தது சுழன்று கொண்டிருக்கும் இருக்கும், உருகிய இரும்புக் குழம்பால் ஆன வெளிப்புற மையக் கட்டமைப்பு(Outer core). மத்தியில் திட இரும்பாலான மையப்பகுதி(Inner core).
இஸ்லாமிய விஞ்ஞானிகள் கூறும் ’ஆப்பு’ புவியின் எந்தெந்த அடுக்குகளை இணைக்கிறதென்பதையும், எந்தெந்த அடுக்ககளைவிட்டு பிரிந்துவிடாமல், எப்படித் தடுக்கிறதென்பதையும் அவர்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
உண்மையில், வெளிப்புற மையக் கட்டமைப்பில் (Outer core) உள்ள திரவ நிலையிலுள்ள இரும்புக் குழம்பின் சுழற்சியே புவியின் காந்தப்பண்பிற்கு காரணமாக அமைகிறது. குர்ஆன் கூறும் முளைகளின் முனைகள், வெளிப்புற மையக் கட்டமைப்பையும்(Outer core) கடந்து மையப்பகுதியான (Inner core) வரை நீண்டுள்ளதா என்பதை நீங்களே உறுதிசெய்துகொள்ளலாம். மலைகள் இருக்கும் பகுதிகளில், பாறை அடுக்கின்(Crust) தடிமன் சற்று அதிகமாக இருக்கிறது; அதைத்தான் முளைகள் என்று முழம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கண்டங்கள், கடல்கள், மலைகள், தீவுகள் எப்படி ஏற்படுகின்றன? எரிமலைகள், நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன? மலைகள் புவி அதிர்வைத் தடுக்கின்றனவா?
கண்டம் நகர்வுக் கொள்கையில் இதற்கான பதில் இருக்கிறது.
ஒரு காலத்தில் தென் கோளத்தின் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று 1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய நிலவியல் வல்லுநர் எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறினார்.

தென் அமெரிக்காவில் கிழக்கே பெருத்துள்ள பிரேஸில் பகுதியும், ஆப்பிரிக்காவின் மேற்கில் உள்ள கினியா வளைகுடாவும் ஒத்த வயதையும், ஒரே வளைவைக் கொண்டதாகக் காணப்படுவதை அடிப்படியாகக் கொண்டு, 1912-ல் இல் நிலவியல் வல்லுநர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஒருகாலத்தில் கண்டங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன எனும் கோட்பாடைக் கூறினார். வெஜினரின் கோட்பாடு எள்ளிநகையாடப்பட்டது. காரணம், அப்பொழுது கண்டநகர்வுக் கொள்கை எழுதப்படவில்லை. கணத்த திட்டுக்களை எப்படி எந்த ஆற்றலால் பிரிக்க முடியுமென்பதை 1950 வரை அறிவியல்ரீதியாக விளக்கப்படாமல் இருந்தது.

புவியின் குளிந்த மேல் அடுக்கு லித்தோஸ்பியர் எனப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். பெரும் தகடுகளா லித்தோஸ்பியர் திரவம் போன்றில்லாமல் வளைந்து, நீண்டு, முறிந்து, உடைந்து நொறுங்குகிறது. இந்த அடுக்கு நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. அவை, ஆப்ரிக்க, அண்டார்டிகா, ஆஸ்திரேலிய, யுரேஸிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக் என்று ஏழுபெரும் தகடுகளாகவும், இந்திய, அரேபிய, கரிபியன் என்ற சிறுதகடுகளவும் அடையாளம் காணப்படுகின்றன.

லித்தோஸ்பியர் அடுத்துள்ள எஸ்தனோஸ்பியர் மிகவும் வெப்பமான பாகு நிலையிலுள்ளது இதில் ஏற்படும் வெப்ப ஓட்டம் காரணமாக உடைபட்டநிலையிலுள்ள குளிந்த மேல் அடுக்கு லித்தோஸ்பியர் நகர்வது சாத்தியமாகிறது. இந்தத் தகடுகளின் விளிம்புகளுக்கிடையே ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை தேய்வு விளிம்பு (Transform boundries), பிரிவு விளிம்பு(Divergent boundries), இணைவு விளிம்பு(convergent boundries) எனப்படுகிறது. இந்த செயல்களால் தட்டுகளின் விளிம்புகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடியில் ஆழ்பள்ளங்களையும் கண்டப்பகுதிகளில் மலைத் தொடர்களையும் உருவாக்குகின்றன.


இணைவு விளிம்பு காரணமாக இந்தியத் தட்டு யுரேசியத்தட்டுடன் மேதுவதால் இமயமலை உருவாகி வளர்ந்து வருகிறது. கடலடியில் காணப்படவேண்டிய Marine Fossils நிலப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் காணப்படுவது மலைகள் உருவாக்கத்திற்கு சிறந்த உதாரணமாகும். கண்டங்களின் நிலத்தட்டுகள் இடப்பெயர்ச்சி நிகழ்வதை தற்போது அண்டவெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் துல்லியமாகத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றன.
பூமியை அதிர்வுகளிலிருந்து காப்பாற்ற, அதை இறுக்கிப் பிடிக்கும் விதமாக முளைகளை அறையட்டிருப்பதாகக் கூறுவதும் அதை அறிவியலுடன் இணைப்பதும் முட்டாள்தனம் மட்டுமல்ல வடிகட்டிய அயோக்கியத்தனமாகும்.
பூமி அசையாமலிருக்க மலைகள் நடப்பட்டிருப்பதாக குர்ஆன் எதற்காகக் கூறவேண்டும்?
இப்ன் ஜரீர் அல்தபரியின் குர்ஆன் விரிவுரையிலிருந்து...
இப்ன் அப்பாஸ், இப்ன் மஸ்வூத் மற்றும் வழியாக அறிவிப்பது...
அல்லாஹ்வின் அரியாசனம் தண்ணீரின் மீது இருந்தது, மேலும் இவற்றைத் தவிர தண்ணீருக்கு முன்னர் எதையும் அவன் படைக்கவில்லை. அவன் படைப்புகளைப் படைக்க விரும்பிய பொழுது, முதலில், தண்ணீரிலிருந்து நீராவி(மூடுபனி) உருவாக்கினான், மேலும் அது தண்ணீரின் மீது இருந்தது. அதை வானம் என்று பெயரிட்டான்; தண்ணீரை வற்றச்செய்து ஒரு பூமியை உருவாக்கினான்; அதை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருதினங்களில் ஏழு பூமிகளாகத் திறந்தான். பூமியை திமிங்கிலத்தின் மீது உருவாக்கினான் மேலும் அந்த திமிங்கிலம் குர்ஆன் 68:1 குறிப்பிடும் ’நூன்’ ஆக இருக்கிறது. மேலும் அந்த திமிங்கிலம் தண்ணீரின் மீதும், தண்ணீர் பாறையின் மீது, பாறை மலக்கின் முதுகின் மீதும், அந்த மலக்கு கல்லின் மீதும், அந்தக் கல் கற்றிலும் இருக்கிறது; இந்த கல்லையே லுக்மான் அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும்..(31:16) என்று குறிப்பிடுவது. பிறகு அந்த திமிங்கிலம் அமைதியற்று அசைந்த பொழுது பூமியும் அதிர்ந்து நடுங்கியது. அதனால் அவன் அது(பூமி) நிலையாக இருக்குமாறு மலைகளை உறுதியாக நிறுவினான், மேலும் மலைகள் பூமியில் சிறப்புக்குரியதாக இருப்பதையே, பூமியில் - உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்க - உயர்ந்த மலைகளை அமைத்தான்;(16:15, 31:10) என்று கூறுகிறான்....
அன்றைய அரேபியர்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் இருந்துள்ளது என்பதை நமக்கு தபரியின் குர்ஆன் விரிவுரை விளக்குகிறது. இயற்கையை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது முயற்சிக்கவில்லை. தங்களுடைய அறிவிற்கு விளங்காதவற்றை கற்பனைக் கதைகளால் பதிலளிக்க முயன்றுள்ளனர். இதற்கு குர்ஆனும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்னும் ஏழாம் நூற்றாண்டின் உளறல்களை, சொற்களையும், பொருளையும் திரித்து, இல்லாத அறிவியலை இருப்பதாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை மனநிலை பிறழ்வு என்றுதான் சொல்ல முடியும்!