இஸ்லாமிடம் தாரிக்-ன் தீரா வேதனை
விடிவெள்ளியா? விண்மீனா? வால்நட்சத்திரமா?
இறைவனே நேரடியாய் ஜிப்ரீல் என்ற கொரியர் சர்வீஸ் வழியே, ரசூல் முஹம்மதுவுக்கு அனுப்பிவைத்தது;இல்லை! இறக்கிவைத்தது; இல்லை!அருளப்பட்டது; குர்ஆன் என்ற இறைவேதம் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவர்களுடன் மட்டுமே இருந்திருக்குமேயானால் நாம் அதுபற்றி பேசப்போவதில்லை. ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள்(?) எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு, பிறமதங்களைக் கேலிபேசுவதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் நாத்திகர்களையும் வீண்வம்புக்கிழுப்பதும் தொடர்கதையாகி வருவதால், நாமும் அதுபற்றி விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஒரு தெருவில் வசித்துவரும் ஒருவன்தனது தாய் பத்தினி என்று கூறுவதை யாரும் பெரிதாக பொருட்படுத்தப்போவதில்லை. ஏனெனில், அவனது நம்பிக்கை அவனுக்கு என்று இருந்துவிடு வார்கள்.இந்தத் தெருவில் எனது தாய் மட்டுமே பத்தினி என்று கூறிக்கொண்டு அலையும் பொழுது, எதிர்மறையாக அவன், மற்றவர்களின் தாய்மார்களை(ப் பத்தினி இல்லை - விபச்சாரி என்று)க் கேவலப்படுத்தி விடுகிறான் என்பதால், மற்றவர்கள் ஆவேசப்படவும், அவனுடைய தாயின் பத்தினித் தன்மை பற்றி, அத்தாயின் அந்தரங்கம் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசவேண்டிய கட்டாயத்தையும் அவனே உண்டாக்கிவிடுகிறான். லா இலாஹ இல்லல்லாஹு வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை) என்ற கலிமா வாக்கியமே,என் தாய்மட்டுமே பத்தினி என்று கூறுவதைப்போல அமைந்திருக்கவில்லையா என்பதே நமது கேள்வி. உன்தாய் பத்தினியா? என்தாய் பத்தினியா? என்று விவாதம் செய்வது, இரண்டு தாய்மார்களின் அந்தரங்கங்களை விவாதப்பொருளாக்கி வேடிக்கைப்பார்ப்பது சரியானது தானா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? ஏனெனில் தாயின் பத்தினித் தன்மை என்பது நம்பிக்கையின் பாற்பட்டதேயொழிய, நிரூபணத்தின் பாற்பட்டதல்ல. இவைகள் விவாதப் பொருளாக ஆக்கப்படும் பொழுது, அறிவு மழுங்கி ஆவேசம் மட்டுமே மிஞ்சும் என்பதை இவர்கள் உணர வேண்டாமா? கடந்த சிலகாலமாகஎனது தாய் மட்டுமே பத்தினி என்பது போன்ற கருத்துகள் சில இஸ்லாமிய அறிஞர்களால்(?) முன்வைக்கப்பட்டு விவாதப் பொருளாக்கப்பட்டதால் நாமும் இந்த விவாதத்தில் பங்கு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். இங்கு முதலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக குர்ஆனிய விளக்கம் பற்றிய விவாதத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்த பலரும் தத்தமது சிந்தனைக்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டார்கள் என்பதையும், அறிவியலுக்கு முரண்பட்டதாகப் பொருள் அமையும்பொழுது அரபிமூலத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத தமிழாக்கங்களைச் செய்து, அதனை அடைப்புக் குறிக்குள்ளோ அல்லது வெளிப்படையாகவோ அமைத்துத் தங்களின் மேதாவிலாசத்தை(?) வெளிப்படுத்திக் கொண்டதையும், ‘பழம் தின்னும் தேனீக்கள்’ எனற முதல் கட்டுரையில் கண்டோம். இந்த கட்டுரையில்குர்ஆனின் விண் அறிவியல் பற்றி சிறிது காணலாம்.
குர்ஆனில் 86வது அத்தியாயம் விடிவெள்ளி (தாரிக்) ஆகும். இதிலுள்ள 17வசனங்களும் (ஆயாத்களும்) மக்காவில் அருளப்பட்டதாக (மக்கீ என்று) குறிக்கப்படுகிறது. அருளப்பட்ட வரிசையில் (தர்தீபே நுஜுலி) இது 36 –ஆக உள்ளது. இந்த அத்தியாயம் 7வது மன்ஸிலில், 30வது ஜூஸ்உ-இல் உள்ளதாகும்.
பொதுவாக, குர்ஆனின்114 அத்தியாயங்களுக்கும் தொடக்க காலங்களில், தலைப்புப் பெயர் இடப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. தோற்றுவாய் (அல்ஃபாத்திஹா) என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, அல் பகரா, ஆலுஇம்ரான், அன்னிஸா முதலிய சில அத்தியாயங்களுக்கு மட்டுமே நபி முகம்மது பெயரிட்டதாக ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகிறது. சில அத்தியாயங்களுக்கு நபித் தோழர்கள் (ஸகாபாக்கள்) பெயரிட்டுள்ளதையும் அறியமுடிகிறது. அப்படியும் கூட, நபித்தோழர்களால் பெயரிடப்பட்ட நிஸாவுல் குஸ்ரா என்ற 65வது அத்தியாயம் பிற்காலத்தில் தலாக் என்று பெயர் மாற்றப் பட்டிருப்பதை அறியும்போது, மேலும் சில அத்தியாயங்கள் இவ்வாறே பெயர் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்கிறோம். தற்காலக் குர்ஆனின் மூலப்பிரதிகளான, காலிபா உஸ்மான் காலத்துப் பிரதிகளில், எந்தவொரு அத்தியாயத்திற்கும் பெயர் இடப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
எது எப்படியாயினும், இன்றைய குர்ஆன் பிரதிகளில் 86வது சூராவில் (அத்தியாயத்தில்) தலைப்பில் அச்சிடப்பட்டிருக்கும் பெயரையே நாம் இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறோம். அந்த அரபு மொழித் தலைப்பின் தமிழ் ஒலிபெயர்ப்பு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. அரபுமொழியில் உள்ளதைத் தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்யும் பொழுது பலரும் பலவிதமாகச் செய்துள்ளனர்.
அவை: 1. தாரிக், 2. அல் தாரிக், 3.அத்தாரிக், 4. ஸூரத்துத் தாரிக், 5.சூரத்துத் தாரிக்கி,
6. சூரா அல் அத்தாரிக்.
இவைகளில் எது சரியானத் தலைப்பு என்று குர்ஆனிய அறிஞர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். எல்லாத் தலைப்புகளும் சரியானதுதான் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் தலைப்புகளுக்குப் பொருள் மாறுபடாத வகையில் முன்னொட்டு - பின்னொட்டு சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அது அனுமதிக்கப்பட்டது என்றும் முடிவுசெய்யப்படுமானால், சரியானத் தலைப்பு எது என்பதில் குழப்பம் ஏற்படுவது உறுதி.
இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் அந்த 86வது அத்தியாயத்தின் தலைப்பையும், முதல் மூன்று வசனங்களையும் எப்படியெப்படியெல்லாம் தமிழாக்கம் செய்துள்ளனர் என்பதை இனி காணலாம். முதலில் அவற்றின் ஒலிபெயர்ப்பும், பின்னர் அதன் தமிழாக்கங்களும் வருமாறு:
86. அத்தாரிக்
1. வஸ்ஸமாஇ வத்தாரிக்
2. வமா அத்ராக மத்தாரிக்
3. அன்னஜ்முஸ் ஸாகிபு
|
1. தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஏ. முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
1/2002, 2/2002, 8/2006 ஆம் ஆண்டின் பதிப்புகள்
86. ஸூரத்துத் தாரிக் -விடிவெள்ளி
1: வானத்தின் மீதும் (அத்தாரிக்)விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக!
2: (நபியே! அத்தாரிக்)விடிவெள்ளி என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அது) இலங்கிக்கொண்டிருக்கும் (ஒரு)நட்சத்திரம்.
2. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1/1983 ஆண்டு பதிப்பு
86. ஸூரத்துத் தாரிஃக் – விடிவெள்ளி
1: வானத்தின் மீதும்விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக,
2: விடிவெள்ளிஎன்னவென்று உமக்கு அறிவிப்பது எது?
3: அது இலங்கும் ஒருநட்சத்திரம்.
3. திருக்குர்ஆனும் ஏனைய வேதங்களும் (திருக்குர்ஆனின் 30வது பாகத்தின் விரிவுரை)
எஸ். முகம்மது அலி, செப்டம்பர் 1984 ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் – விடிவெள்ளி
1: வானின், விடிவெள்ளியின் சான்றாக.
2: விடிவெள்ளி எது என்பதை உமக்கு எடுத்துக்கூறியது எது?
3: (அது) ஊடுருவும் ஒளியுடைய ஒரு விண்மீன்.
4. மவாஹிபுல் குர்ஆன் (சூரத்துல் ஃபாத்திஹா, அம்ம ஜுஸ்உவின் தமிழ் விரிவுரை)
1/2003 ஆண்டு பதிப்பு
86. ஸூரத்துத் தாரிஃக் – விடிவெள்ளி
1: வானத்தின் மீதும், “(அத்தாரிக்)”விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக.
2:“தாரிக்”என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அதுதான்) பிரகாசித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம்.
5. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
அப்துல் காதிர் பாகவி) ஜனவரி 2000ஆம் ஆண்டு பதிப்பு
86. ஸூரத்துத் தாரிக் –விடிவெள்ளி
1: வானத்தின் மீதும் “அத்தாரிக்”(என்னும் விடிவெள்ளியின்) மீதும் சத்தியமாக -
2: (நபியே) அத்தாரிக்என்னவென்று உமக்குத் தெரியுமா?
3: (அது) பிரகாசிக்கும் ஒருநட்சத்திரம்.
6. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி) –
1961, 1978 ஆம் ஆண்டு பதிப்புகள்
86. தாரிக் – உதயதாரகை
1: வானத்தின் மீதும் உதயதாரகைமீதும் சத்தியமாக,
2: (நபியே) உதயதாரகைஎன்னவென்று நீர் அறிவீரா?
3: (அதுதான்) சுடரிடும்நட்சத்திரம்.
7. திருமறையின் தேன்மலர்கள் (திருக்குர்ஆன் வெண்பா) – வே.ப.பாபுல் –
2007ஆம் ஆண்டு பதிப்பு
86. தாரிக் – உதயதாரகை
1-3: கார்முகிலின் வான்மீதும் கண்பறிக்கும் சீருதய
தாரகை தன்மீதும் சத்தியமாய் - ஏர்நபியீர்
ஒண்ணுதய தாரகையோ உற்றுச் சுடர்வீசும்
விண்மீனே யாகும் வெளிர்ந்து.
மேலே எடுத்துக்காட்டியுள்ள ஏழு தமிழாக்கங்களிலும் தாரிக் என்ற தலைப்பானது விடிவெள்ளி என்றும்உதயதாரகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டு சொற்களுமே ஒரே பொருளைக் குறிப்பனவேயாகும். தமிழில் விடிவெள்ளி(விடியற்கலையில் தோன்றும் வெள்ளி) என்பதைத்தான் வடமொழியில்உதயதாரகை (சூரிய உதயத்தின் போது தோன்றும் விண்மீன், அதாவது விடிவெள்ளி) என்று குறிப்பிடுகின்றனர்.
(உதய தாரகை என்பது கிரகமே யொழிய, தாரகை என்று குறிப்பிட்டுவிட்டதால் அது நட்சத்திரமாகி விடாது. எரிநட்சத்திரம், வால்நட்சத்திரம் என்பவை போலவே உதயதாரகையும் நட்சத்திரம் அல்ல. இவை பற்றி பின்னர் விளக்கப்படும்.)
அரபு மூலத்தில், இந்த அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களில், தாரிக் என்ற சொல் முதலிரண்டு வசனங்களிலும்,னஜ்மு என்ற சொல் மூன்றாம் வசனத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.தாரிக் என்ற சொல்லிற்கு விடிவெள்ளிஅல்லது உதயதாரகை என்ற சொல்லையும், னஜ்மு என்ற சொல்லிற்குநட்சத்திரம் அல்லது விண்மீன் என்ற சொல்லையும் மேலே கண்ட ஏழு குர்ஆனிய அறிஞர்களும் பயன்படுத்தி உள்ளதையும் காண்கிறோம்.
இதோடுகூட மற்றும் சில அறிஞர்கள், தலைப்பை விடிவெள்ளி அல்லதுஉதயதாரகை என்று மொழிபெயர்த்து விட்டு, தாரிக் என்ற சொல் வருகின்ற வசனங்களில் விடிவெள்ளி அல்லதுஉதயதாரகை என்று குறிப்பிடாமல் தாரிக்என்ற அரபுச்சொல்லை அப்படியே தமிழில் ஒலிபெயர்ப்பாக்கி நிறைவுசெய்து வைத்துள்ளனர். அந்த மொழிபெயர்ப்புகள் வருமாறு:
8. திருக்குர்ஆன்-தமிழாக்கம் (பி.ஜைனுல்ஆபிதீன்)– 1/2002, 2/2003, 4/2005, 7/2008,
11/2013ஆம் ஆண்டு பதிப்புகள். (தௌஹீது ஜமாத் மொழிபெயர்ப்பு)
86. அத்தாரிக் – விடிவெள்ளி
1: வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
2: தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
3: அது ஒளி வீசும் நட்சத்திரம்.
9. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 6/1990, 9/1993ஆம் ஆண்டு
பதிப்புகள்
86. ஸூரத்துத் தாரிஃக் –விடிவெள்ளி
1: வானத்தின் மீது சத்தியமாக!தாரிக் மீதும், சத்தியமாக!
2: தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
10. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 26 / 2010 ஆம் ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் – விடிவெள்ளி
1: வானத்தின் மீது சத்தியமாக!‘தாரிக்’ மீதும், சத்தியமாக!
2: ‘தாரிக்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: அது இலங்கும் (ஒரு)நட்சத்திரம்.
11. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
அப்துல் காதிர் பாகவி) செப்டம்பர் 2002, செப்டம்பர் 2004, மே 2005, ஜூன் 2007,
ஜூலை 2011ஆம் ஆண்டு பதிப்புகள்
86. அத் தாரிக் – விடிவெள்ளி
1: வானத்தின் மீதும், “தாரிக்” மீதும் சத்தியமாக -
2: (நபியே) “தாரிக்”என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அது) பிரகாசிக்கும் ஒருநட்சத்திரம்.
12. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
அப்துல் காதிர் பாகவி) மே 2002 ஆம் ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் – உதயதாரகை
1: வானத்தின் மீதும், “தாரிக்” மீதும் சத்தியமாக -
2: (நபியே) “தாரிக்”என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அது) பிரகாசிக்கும் ஒருநட்சத்திரம்.
13. திருக்குர்ஆன் – மூலம் – தமிழுரை (எஸ். எஸ். அப்துல் காதிர் உமரி) டிசம்பர் 2011
ஆம் ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் –விடிவெள்ளி
1: வானத்தின் மீது சத்தியமாக!தாரிக்கின் மீதும் சத்தியமாக!
2: தாரிக் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: அது இலங்கும் ஒரு நட்சத்திரம்
14. குர்ஆன்– தமிழாக்கம் (டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான்)
மே 2007ஆம் ஆண்டு பதிப்பு
86. விடிவெள்ளி (அரபு மொழிச் சொல் கொடுக்கப்படவில்லை)
1: வானத்தின் மீது சத்தியமாக!‘தாரிக்’ மீதும் சத்தியமாக.
2: ‘தாரிக்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: அது ஒளிவீசும் நட்சத்திரம்………
15. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் தமிழ்மொழியில் அதன் கருத்துக்களின் மொழி
பெயர்ப்பு (முஹம்மது இக்பால் மதனீ– சௌதி அரேபிய அரசுப் பதிப்பு) –
ஏப்ரல் 1993(?)
86. அத் தாரிக் – உதயதாரகை
1: வானத்தின் மீதும், “தாரிக்”கின் மீதும் சத்தியமாக,
2: “தாரிக்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அதுதான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.
16. தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத் (எஸ்.எஸ். முஹம்மது அப்துல்
காதிர் சாஹிப் பாக்கவி) பாகம்-20, 3 / 2009ஆம் ஆண்டு பதிப்பு
86. சூரத்துத் தாரிக்கி – (“தாரிக் என்பதற்குப பல பொருள்கள் உண்டு. ஆனால்
இவ்விடத்தில் விடிவெள்ளியை இப்பதம் குறிக்கிறது.” – என்கிறார், இதன் ஆசிரியர், எஸ்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள்)
1: வானத்தின் மீது சத்தியமாக. இன்னும் ‘தாரிக்’கின் மீதும் (சத்தியமாக)
2: மேலும், தாரிக் என்பது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3: (அது) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்.
மேலே எடுத்துக்காட்டியுள்ள 16 குர்ஆன் மொழியாக்கங்களில் (வரிசை எண்:1, 2, 3, 4, 5, 6, 7 ஆகிய) ஏழில் மட்டுமே தலைப்பிலும் மற்றும் வசனங்களிலும்‘தாரிக்’ என்பதற்கு ‘விடிவெள்ளி’ அல்லது‘உதயதாரகை’ என்ற பொருள் எந்தவொரு குழப்பமுமின்றி தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள (வரிசை எண்: 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ஆகிய) ஒன்பது மொழியாக்கங்களிலும் தலைப்பில் மட்டுமே ‘விடிவெள்ளி’ அல்லது‘உதயதாரகை’ என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளதேயொழிய, தமிழாக்க வசனங்களில் ‘விடிவெள்ளி’யும் இல்லை, ‘உதயதாரகை’யும் இல்லை.‘தாரிக்’ என்ற அரபுச்சொல் அப்படியே ஒலிபெயர்ப்பாகத் தமிழ் எழுத்துகளில் (‘தாரிக்’ என்றே) குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இங்குதான் இருக்கிறது குர்ஆனின் விண்அறிவியல். அதனை கொஞ்சம் அலசலாமா?
விடிவெள்ளி அல்லது உதயதாரகை என்றால் என்ன?