இஸ்லாமும் பலதார மணமும்
அண்மையில் ஊடகங்களில் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று ’முத்தலாக்’ என்ற முஹம்மதிய விகாரத்து முறை. ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சிகளில் முத்தலாக் பற்றிய சர்ச்சைகள் விவாதங்கள் நடைபெற்றது. மிகப் பெரும்பாலும் இது போன்ற விவாத நிகழ்ச்சிகள் சடங்குகள் போலத்தான் இருக்கிறது. காரணம், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் தரப்பில் தீர்வை அடைவதற்காகவாது இதைப் போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அதிலும் குறிப்பாக மதநம்பிக்கைகள் விவாதத்திற்குள்ளாகும் பொழுது, ஊடகங்களின் நிலை மிகக் கேவலமாக இருக்கிறது. பரபரப்பை விற்பனை செய்பவர்களிடம் இதற்குமேல் எதிர்பார்க்கக் கூடாது.
முத்தலாக் பற்றிய ஒரு செய்தித் தொலைக்காட்சி விவாதத்தில்(?) பங்கேற்ற ஒரு நபர் முஹம்மதியம், ஆண்களுக்கு அனுமதிக்கும் பலதாரமணத்தின் மீதும் விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் அங்கு நிலவிய களேபரத்தில் எவரும் அவரது கருத்தைச் சீண்டவில்லை. வழக்கமான சம்பிரதாய போல அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அவரவர் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பளித்து, தங்களது தரப்பிலிருந்து எவ்விதமான கருத்தையும் முன்வைக்காமல் அத்தொலைக்காட்சி தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. அனைத்து ஊடகத்தின் நிலைப்பாடும் இப்படித்தான் இருக்கிறது. காரணம் நடுநிலையென்பார்கள். (அதென்ன நடுநிலை?) முதுகெலும்பில்லாதனம் என்று சொல்வதைத் தவிர, எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.
சரி… விஷயத்திற்கு வருகிறேன்…!
அந்த நபர் பலதாரமணம் பற்றி குறிப்பிட்ட பொழுது எனது நினைவில் குர்ஆனின் 4:3 வந்து போனது. பலமுறை பலராலும் விவாதிக்கப்பட்ட அந்த வசனம், அனாதைகளைப் பற்றி பேசத் துவங்கி பலதார திருமணத்தையும், அடிமைப் பெண்களுடனான உறவை ஆதரித்தும் முடியும். முதலில் ஒரு பழைய மொழிபெயர்ப்பைக் மொழிபெயர்ப்பைக் காண்போம். எளிமையான புரிதலுக்காக அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவற்றை சிவப்பு வண்ணத்தில் தருகிறேன்.
குர்ஆன் 4:3
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில், உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்(அடிமைப்) பெண்ணையே, (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (பதிப்பு 1961)
ஏறக்குறைய மொழிபெயர்ப்பு வாக்கியங்களுக்கு இணையாக அடைப்புக் குறிகளுக்குள் இவர்களது இடைச் சொருகல் இருக்கிறதென்று வருத்தப்பட வேண்டாம். குர்ஆனின் தர்ஜமாவின் அடைப்புக் குறிகளை நீக்குவதற்கென்றே அவதாரம் கொண்டுள்ளதாக அறியப்படும் அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பு.
குர்ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
இந்தக் குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது?
அனாதைகளைப் பாராமரிக்கும் ஒரு முஹம்மதிய நம்பிக்கையாளர், தனது பொறுப்பிலிருக்கும் அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளமாட்டாரென தனக்குத் தானே அஞ்சினால், அவர், தனக்குப் பிடித்த வேறு ஒரு பெண்ணை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை (நான்கு?) மணந்து கொள்ளலாம் அல்லது அடிமைப் பெண்களுடன் உறவு கொள்வதைப் பரிந்துரைக்கிறது.
தனது நேர்மையை, தனக்குத் தானே சந்தேகிக்குமளவிற்கு தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நபரால் தொடர்ந்து அந்தத் தவறைச் செய்ய முடியுமா?
நிச்சயமாக முடியாது! அவ்வாறு செய்துவிட்டார் எனில் அவர் அஞ்சி நடுங்கியதாகக் கூறுவதில் உண்மையில்லை.
பெண்கள், அனாதைகளைப் பராமரிக்கலாமா?
பெண் பராமரிப்பாளருக்கான சட்டங்கள் என்ன?
அனாதைகளுக்கும் பலதார மணத்திற்கும் என்னதான் தொடர்பு?
இதனால் அந்த அனாதைகள் பெறும் நீதி என்ன?
இப்படி இன்னும் நிறைய நிறைய கேள்விகள் உருவாகும். இதற்கான பதில் இந்த வசனத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த குர்ஆனிலும் நிச்சயமாகக் கிடையாது. நாம் விமர்சனங்களை முன்வைத்தால், குர்ஆன் மொழிபெயர்ப்பில் குறைபாடு உள்ளது, அரபியை அதாவது அரபு மொழியிலுள்ள குர்ஆனை அப்படியே மொழிபெயர்க்க இயலாது; காரணம் அதன் மொழிநடை இதர மொழிகளால் எட்டிப் பிடிக்க இயலாத உயரத்திலுள்ளது, இதுவே குர்ஆன் இறைவேதமென்பதற்கு சாட்சி என்று சுயசொறிதலில் ஈடுபடுவார்கள்.
ஒரு வாதத்திற்காக, அரபி அல்லாத மற்ற மொழி பேசுபவர்களால் குர்ஆனைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றே வைத்துக் கொள்வோம். இதன் பொருள், சிறு வயது முதல் தங்களது மரணம் வரை அரபிமொழியையும் முஹம்மதியச் சட்டங்களையும் கற்பதற்கும் கற்பிப்பதற்கு செலவிட்டுக் கொண்டிருக்கும் இதர மொழியைத் தாய்மொழியாக் கொண்ட முஹம்மதிய அறிஞர்களாலும், குர்ஆனை இன்றும் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான்.
தாய் மொழி அல்லது வேறொரு மொழியின் உதவியுடன்தான் இன்னொரு மொழியைக் கற்கமுடியும் என்பது மிக இயல்பான உண்மை. உதாரணத்திற்கு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஹம்மதிய சிறார்களுக்கு, அரபியை கற்பிக்கையில் ”ஸமா” என்ற அரபி சொல்லுக்கு , தமிழில் “வானம்” என்று எழுதியும், வானத்தின் படங்களைக் காண்பித்தும் கற்பித்துக் கொடுக்கிறார்கள்.
அவ்வாறல்லாமல் நேரடியாக அரபு மொழியைக் கற்க முடியுமா?
முடியாது!
அதற்கு வேறொரு வழியிருக்கிறது.
முஃமின்கள் தங்களது குழந்தைகள் பிறந்தவுடன் அரேபியப் பாலைவனத்தில் வீசியெறிந்துவிடவேண்டும் அல்லது அல்லாஹ்விடம் அழுது புலம்பி துஆ கேட்டு எல்லோரையும் அரபிகளாப் பிறக்கச் செய்து குர்ஆனைப் புரிந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.
நாம் என்னதான் கூறினாலும் குர்ஆனை அதன் உண்மையான பொருளுக்கு எவராலும் மொழிபெயர்க்க முடியாதென்ற தங்களது வாதத்தை ஒருபொழுதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
இவர்களுக்கும் அதாவது நமது முல்லாக்களுக்கு அரபி சரியாகப் புரியவில்லை. ஆனால், அரபியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், முஹம்மதின் காலத்தில் வாழ்ந்தவர்களும்கூட புரியவில்லை எனில் என்னவென்று சொல்வது? பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…
புகாரி 2494
உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும் மூன்றாக, நான்கு நான்காக மண முடித்துக் கொள்ளுங்கள் (4:3) என்னும் இறை வசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்க மளித்தார்கள்:
என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற - அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளது காப்பாளர் அவளது மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மண முடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களுடைய விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் நினைவு படுத்துகின்றான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான்) என்னும் (4:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
மேலும், இவ்வேதத்தில் (முன் பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும்... என்று அல்லாஹ் கூறியிருப்பது, அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்..... என்னும் (4:3) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த(அநாதை)ப் பெண்களை மணமுடித்துக் கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலே தவிர மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஹதீஸை வாசித்த பின்னர், மற்ற கேள்விகளைவிட, அனாதைகளுக்கும் பலதார மணத்திற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி இன்னும் வலுப் பெற்றிருக்கும்!
ஹதீஸைத் திரும்பத் திரும்ப வாசித்தாலும் ஒன்றும் விளங்காது. இருப்பினும் இந்த ஹதீஸ் வாயிலாக ஆயிஷா கூற முயற்சிப்பதாக நான் கருதுவது,
தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை மஹ்ர் விஷயத்தில் ஏமாற்றுபவர்களைக் குறித்தே இவ்வசனம் பேசுகிறது.
குர்ஆன் 4:127, அழகும், செல்வமும் இல்லாத அநாதைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்களைக் குறித்துப் பேசுகிறது.
ஆயிஷா குறிப்படும் குர்ஆன் 4:127 வசனத்தையும் கவனித்துவிடுவோம். அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து…
குர்ஆன் 4:127
பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
இதில், குர்ஆன் 4:127-ற்கு ஆயிஷா விளக்கம் கொடுப்பதைப் போல “…மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது…” என்ற வாக்கிய அமைப்பு அல்லது அத்தகைய பொருள்படும் வார்த்தைகள் ஏதேனும் இருக்கிறதா?
இப்பொழுது இரண்டு வசனங்களையும் இணைத்து பார்த்தால் என்ன விளங்குகிறது?
முதலில் நாம் முவைத்த கேள்விகளுக்கு ஏதேனும் பதில் இருக்கிறதா?
ஒரு வெங்காயமுமில்லை…!
அனாதைகள் பற்றி செய்தி இன்னுமொரு வசனத்தில் இருக்கிறது. அதையும் பார்த்துவிடுவோம்.
குர்ஆன் 4:6
அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகிவிடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
இவ்வசனத்திற்கு விளக்கம்…
புகாரி 2212
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!" என்ற (திருக்குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.
அனாதைகளின் உடமைகளை நிர்வகிப்பதை பற்றி இந்த வசனம் சொல்கிறது. ஆனால் குர்ஆன் 4:3-ம் வசனத்திலிருந்து உருவாகும் கேள்விகளுக்கான பதிலோ அல்லது நாம் முன்பு கவனித்த புகாரி 2494-ல் ஆயிஷா கூறும் கருத்திற்கான சான்றுகளோ இல்லை. நாம் இப்படிக் குர்ஆனை முட்டுச் சந்தில் நிற்க வைத்தால், பதிலளிக்கிறோம் பேர்வழியென முஃமின்கள் இணைப்புகளை வாரி வழங்குவார்கள். அவர்களுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. ஆன்லைன் பீஜே-வின் 393-வது குர்ஆன் விளக்கம்.
… … …
அண்ணன் பீஜே அவர்களின் குர்ஆன் விளக்கவுரைகளை வாசித்து விட்டீர்களா?
ஆன்லைன் பீஜேவின் இணைப்பிற்குச் செல்ல முடியாதவர்களுக்காகவும், எத்தனை முறைதான் இதை வாசிப்பது என்று நொந்து போனவர்களுக்காகவும் அண்ணன் பீஜே அவர்கள் கற்பிக்கும் நீதியிலிருந்து… மன்னிக்கவும்! விளக்கத்திலிருந்து சுருக்கமாக…
…பொதுவாக மனிதன் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தன்னையும் அறியாமல் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். நாம் தானே இவளைப் பராமரிக்கிறோம் என்ற எண்ணத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறான். இந்தப் பலவீனத்தைத்தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்…
இரண்டு, மூன்று, நான்கு பெண்களை மணந்து கொள்ள அனுமதியிருக்கும் போது உங்கள் பொறுப்பில் நம்பி ஒப்படைக்கப்பட்ட அனாதைப் பெண்களை ஏன் ஏமாற்றி மணந்து கொள்கிறீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது
இது குர்ஆன் 4:03-ற்கு முற்றிலும் தவறான விளக்கம். காரணம் அனாதைப் பெண்களின் விஷயத்தில், மனிதர்கள் தங்களையும் அறியாமல் தவறு செய்வதாகவோ அல்லது உரிய மஹ்ர் கொடுக்கமல் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்ள முயற்சித்தனர் என்றோ குர்ஆன் கூறவில்லை; மாறாக நீதியுடன் நடந்துகொள்ளத் தவறிவிடுவோமோ என அஞ்சி நடுங்குபவர்களைப்பற்றியே பேசுகிறது.
வாததிற்காக, 'அனாதைகளிடம் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால்' என்பது எல்லா வகையான அநியாயத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும் என்ற அண்ணன் பீஜே அவர்களின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு , அனைத்து வகையான நீதிகளிலிருந்தும் தவறிவிடுவோமோ என்று அஞ்சக் கூடிய ஒருவனால் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதை அண்ணன் பீஜே அவர்களும் உணந்திருக்கிறார். அதனால்தான் குர்ஆனின் உளறலைச் சரிகாண விளக்கம் என்ற பெயரில் ”உங்கள் பொறுப்பில் உள்ள அனாதைகளை அவர்களுக்குத் தகுதியான இடங்களில் மணமுடித்துவையுங்கள்!” என்ற தனது கைச்சரக்கையும் உள்ளே நுழைத்திருக்கிறார்.
நீங்கள் வேறு பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. இதை 4:127 வசனத்திலிருந்து அறியலாம்.
குர்ஆன் 4:127 அப்படி ஏதேனும் இருக்கிறதா? நான் கூறுவதில் நம்பிக்கையில்லை எனில், எதற்கும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
தனது பொறுப்பில் இருப்பதைப் பயன்படுத்தி அவளை வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது.
எளிமையான புரிதலுக்காக நாம் முன்பு கவனித்த புகாரி 2494 ஹதீஸில் ஆயிஷா கொடுத்த விளக்கத்தை மீண்டும் இங்கு தருகிறேன்.
“…மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது…”
இந்த இரண்டு கருத்துக்களும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனத்தில் இல்லையென்பது மட்டுமல்ல ஆயிஷா மற்றும் அண்ணனின் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று நேரெதிராது என்பதுதான் வேடிக்கை. தவறு செய்துவிடுவோமோ என்று அஞ்சி நடுங்குவதாக குர்ஆன் கூறிய பின்னரும் வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது, என்ற அண்ணனின் விளக்கங்கள் அர்த்தமற்றது.
மீண்டும் குர்ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, ஒரு முஃமினின் பொறுப்பில் சில அனாதைகளைப் பெண்கள் இருப்பதாகவும், அந்தப் பெண்களுக்கு உடமையாக சிறிது செல்வம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். தான் அப்பெண்கள் விஷயத்தில் நீதி தவறிவிடுவோமோ என்று தினமும் அச்சம் கொள்கிறார். அதாவது, புகாரி 2494-ஆயிஷா கூறுவதைப் போல உரிய மஹ்ர் கொடுக்காமல் அனாதைப் பெண்களை திருமணம் செய்து விடுவோமோ என பயந்து நடுங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
என்ன செய்வதென்று புரியாத நிலையில், முல்லாவின் உதவியை நாடுகிறார். முல்லாவும், அவருக்கு (முல்லாவுக்கு பிடித்தமான அல்ல! உதவிதேடி வந்தவருக்குப்) பிடித்த வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ள குர்ஆனின் வழிகாட்டுதல்படி அறிவுறுத்துகிறார். முஃமினும் ஒவ்வொன்றாக, இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக திருமணம் செய்து, தனது நியாயவிலைக் கடை அட்டையில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார்.
கேள்வி என்னவென்றால்?
அனாதைப் பெண்களுக்கே மஹ்ர் கொடுக்க தயங்குபவர், அவருக்குப் பிடித்தமான வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள, உரிய மஹ்ர் எவ்வாறு கொடுப்பர்? அவர்களுக்கு மஹ்ர் கொடுக்க வேண்டாமா?
அவர் வேறு பெண்களை உரிய மஹ்ர் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ திருமணங்கள் செய்து கொள்வதால் அனாதைப் பெண்கள் பெற்ற நீதி, நேர்மை, நியாயம் என்ன?
அந்த அனாதைப் பெண்களை என்ன செய்வது?
இதற்கான பதில் குர்ஆனில் கிடையாது. அப்படியானால் அநாதைகளுக்கும் பலதாரமணத்திற்கும் என்னதான் தொடர்பு?
அனாதைப் பெண்கள் விஷயத்தில் அநீதி இழைத்துவிடுவோம் என அச்சம் கொள்ளும் முஃமின்களுக்கு மட்டும்தான் பலதார மணத்திற்கான அனுமதி என்று பொருள் விளங்க வாய்ப்பிருக்கிறதா?
”அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.”
என்ற வாக்கியத்தை வாசிக்கும் எவரும் அனாதைகளுக்கும், பலதாரமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதுவது மிக இயல்பான ஒன்று. இது முரண்பாடற்ற ஒரே வாக்கியம் எனில், அனாதைப் பெண்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடாத மற்ற ஈமான்தாரிகளுக்கு தங்களுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை என்ற முடிவிற்கு மட்டுமே வரமுடியும். ஆனால் அனாதைப் பெண்கள் பெற்ற நீதியென்ன, அவர்களது திருமண விவாரத்தில் குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பது தனி விவாதமாகும்.
இந்த விளக்கத்தை முல்லாக்களாலும் முஃமின்களாலும் ஏற்க முடியாது. ஆண்ககளுக்கான பலதாரண திருமண உரிமை மாநாடு, போராட்டம், பேரணி, தொலைக்காட்சிகளில் தொடர் பயான் என்று இப்பொழுதே கிளம்பிவிடுவார்கள்.
”அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்…”, என்பதையும் ”உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.” என்பதையும், அனாதை பெண்களுக்கான நீதியையும் இணைத்துப் பொருள் விளங்க, அன்றைய முல்லாக்களாலும் முடியவில்லை என்பதை புகாரி 2494 நமக்கு தெளிவாக அறிவிக்கின்றது.
இந்த வசனத்திற்குள் பலதாரமணத்தைப்பற்றிய விவாதத்தை நுழைத்தால், அனாதைப் பெண்களின் நிலை பற்றிய குர்ஆனின் நிலைப்பாடு இன்னும் கேலிக்குரியதாகிவிடும்.
ஒரே காலத்தில் நமது முஃமின்கள் அதிக பட்சமாக நான்கு பெண்களுடன் இல்லற வாழ்க்கை நடத்தலாம் என்பது முல்லாக்களின் முடிவு. கவனிக்கவும் குர்ஆனின் முடிவல்ல. நமது கண்மணி நாயகம் முஹம்மது உட்பட அவரது கைத்தடிகளும் அன்றை பாகன் அரபிகளும் எண்ணற்ற பெண்களுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுட்டிருந்தனர். இதைக் கண்டு எரிச்சலுற்ற அல்லாஹ், இவர்களைக் கட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இத்தகைய மனைவி உச்ச வரம்பு சட்டம் பிறப்பித்தான் என்பது முல்லாக்களின் விளக்கம்.
சரி… இதற்கும் அனாதைகளுக்கான நீதிக்கும் என்ன தொடர்பு?
ஒரே வாக்கியத்தில், தெளிவற்ற நிலையில் தொடர்பற்ற இருவேறு செய்திகள். அதனால்தான், எத்தனை விளக்கம் கொடுத்தாலும் இவ்வசனங்கள் திரும்பத் திரும்ப, முட்டுச் சந்தில் போய் சிக்கிக் கொள்கிறது.
அதுமட்டுமல்லாது அன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களில் அனாதைப் பெண்களுக்கு எவ்விதமான நீதியும் காணப்படவில்லை அண்ணன் பீஜே அவர்களும் உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான் தனது குர்ஆன் விரிவுரையின் 393-வது விளக்கத்திற்கு “அனாதைகளுக்கு நீதியும் பலதாரமணமும்” என்ற தலைப்பைச் சூட்டியிருக்கிறார். குறிப்பிட்ட அவரது விளக்கத்திலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில், அனாதைப் பெண்களுக்கு எவ்விதமான நீதியையும் கூற முடியவில்லை என்பதை முன்பே கவனித்தோம். உண்மையென்னவெனில் குர்ஆனின் தெளிவற்ற, முழுமையற்றத் தன்மையை மறைக்க, மழுப்ப இவர்களால் இயலவில்லை.
குறிப்பிட்ட அந்த வசனத்தில் இருப்பது ஒன்றிற்கொன்று தொடர்பற்ற இரண்டு செய்திகள் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் அன்றைய முல்லாக்கள் சப்பைக்கட்டுகளைக் கொடுத்து அடக்கி வாசித்திருக்கின்றனர் என்பது தனிச் செய்தி. (இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? என்று முஃமின்கள் அறைக்கூவல் விடுக்கக் கூடும்!).
குர்ஆன் 4:3-ல் கூறப்படும் அநாதைகளுக்கும் பலதாரமணத்திற்கும் என்னதான் தொடர்பு?
அவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நீதி என்ன?
@தஜ்ஜால்