இஸ்லாமும் பாலியலும் (-1)
mohammed zubair siraji
இங்கு முழுமையாக படிக்கலாம் அன்பிற்கினிய வாசக நேயர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.
எனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.
மேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலநேரங்களில் தம்பதியரூள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல்வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.
பொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா? என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காதிருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)
இன்னும் சோல்லவேண்டுமானால், பெண்களும்கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத்துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்ற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா?" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! திரவம் வெளிப்பட்டிருந்தால்" என பதிலளித்தார்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்?" என்றார்கள். (நூல்: புகாரி 130)
இங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்!
"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.
உண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.
முஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: "வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)
நாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில்! எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?
இப் பகுதியில் (ஆண்-பெண் பாலியல்) வெளியாகும் கட்டுரைகள், செய்திகள் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை" (அல்குர்ஆன் 33:35)
இதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).
''உடலுறவும் ஓர் அறச் செயலே'' -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறது.
"செயல்கள் எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒருவர் எதை நாடுகிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கும்...'' அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (இந்த நபிமொழியைத்தான் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிமொழி திரட்டிலேயேயே மிகச்சிறந்த நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் முதல் நபிமொழியாக இடம் பெறச்செய்துள்ளார்கள்.)
இதன் மூலம், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எண்ணம் அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவரின் செயல் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்கு, அதை அல்லாஹ்வின் அன்புத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கேற்ப செய்வதாய் எண்ணம் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது வெறும் பழக்கச் செயலாகவே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: "திருமணம் என் வழியை (ஸுன்னா) சார்ந்தது. எவர் என் வழியை (நிராகரிக்கும் முகமாக) பின்பற்றுவதில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். மேலும், திருமணம் செய்யுங்கள் (மற்றும் இனவிருத்தி செய்யுங்கள்) நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு, பிற சமூகத்தாரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுவேன்..." (நூல்: ஸுனன் இப்னு மாஜா 1846)
இந்த நபிமொழியிலிருந்து, மக்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும், சந்ததியினரைத் தேடிக்கொள்வதும் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் அனுமதிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.
உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.
ஒருவர் தம் துணைவரோடு உடலுறவில் ஈடுபடும்போது, அனுபவித்து மகிழும், இச்சையைத் தணிக்கும் நோக்கம் கொள்வதில் தவறில்லை. அது இயற்கையானதே. உடலுறவு ஓர் அசிங்கமான செயலல்ல. மாறாக, அது எண்ணற்ற நபிமார்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களும் செய்துள்ள ஓர் உயர்வான செயல். எனவே, இச்செயலை சட்டத்துக்கு உட்பட்டு மகிழ்ந்து அனுபவிப்பது எவ்விதத்திலும் வெட்க உணர்வுக்கு எதிரானதல்ல, நற்பண்புக்கு முரணானதுமல்ல.
உடலுறவு அசுத்தமானது, இச்சையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் - மல ஜலம் கழிக்கும் தேவையைப் போலத்தான் அதை செய்ய வேண்டியுள்ளது. - என்று சிலர் காண்கின்றனர். இப்படி ஒரு தவறான எண்ணம் கொண்டிருக்கும் மனிதர்கள் தயக்கத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் சுக அனுபவங்கள் அனைத்தும் அவமரியாதையானது, ஒழுக்கக்கேடானது என்று கருதுகின்றனர்.
உண்மையில் இவர்கள் உடலுறவின் அசல் தன்மையை தவறவிட்டு விட்டவர்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இயற்கையாகவே; தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும். அந்த நிலைக்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான எண்ணங்கள்; உடலுறவை ஓர் உடல் அளவிலான சுகம் என்பதிலிருந்து மாற்றி, ஓர் அளப்பரிய நற்கூலி கிடைக்கும் செயலாகவும், ஒருவகையான அறச்செயலாகவும் உயர்த்துகின்றன.
அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
"...நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் - இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது" என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்" (ஸஹீஹ் முஸ்லிம் 1006)
அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; "....மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)
"அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள்" எனும் வசனத்திலிருந்து அல்லாஹ் விதித்துள்ளதை தேடிக்கொள்வதற்காக வேண்டியாவது ஒவ்வொருவரும் உடலுறவு கொள்வது ஓர் இறைக்கட்டளை என்பதை விளங்கலாம்.
இறை கட்டளை எனும்போது அதை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
"பெண்களுடன் உடலுறவு கொள்வதன்மூலம், உங்களுக்காக விண்ணுலக ஏட்டில் (லவ்ஹூல் மஹ்ஃபூள்) விதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். வெறுமனே இச்சையைத் தணித்துக் கொள்ளும் உடலுறவு மட்டும் நோக்கமாக இருப்பது உவப்பானதல்ல'' என்று தஃஸீரே உஸ்மானி (1:123) யில் எழுதுகிறார்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்.
எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும்போது அவருக்கு இயற்கையாகவே தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கிய அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும்படி நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர் பரவசத்தின் உச்சநிலையிலும்கூட தன் தம் துணைவரோடு கொள்ளும் உயலுறவு மூலம், ஆசை நிறைவேற்றத்துக்கு அப்பால் உள்ள பல உயர் நன்னோக்கங்களை நினைவில் நிறுத்த வேண்டும். அதே சமயம் உடலுறவின்போது இறைசிந்தனை இருந்தால்தான் அது வணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் எண்று அர்த்தமல்ல. அனுமதிக்கப்பட்ட வழியில் - திருமணம் முடித்து தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலே அது வணக்கமாகத்தான் ஆகிவிடுகிறது.
அனைவருமே தொழுதாலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திற்கும் இக்லாஸிற்கும் தகுந்தாற்போல் நன்மைகளில் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் இதிலும் என்று கொள்ளலாம். உடலுறவின்போது இறைவனின் நினைவு இருந்தால் அதற்கு அதிக நன்மை உண்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதே.
 உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை
பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை.
இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும்.
கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு.
துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும்.
ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குறிய வழிமுறையாகும்.
இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.
 கணவனின் உரிமை :
ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
"ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436)
இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.
திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்;
"எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)
இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; "ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)
இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.
எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)
மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே "அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை" என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.
அல்லாஹ் கூறுகின்றான்;
"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)
"நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
 மனைவியின் உரிமைகள் : ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள்.
கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.
இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.
கதாவும் ஷஅபியும் அரிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;
"ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்" என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்" என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ''அவள் (அசலில்) புகார் செய்கிறாள்'' என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். "எப்படி?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.
"அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)" என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்" என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; "அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு.." (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா - பக்கம் 161)
இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு மனிதர் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து.
ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.
இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். "எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)
"அவர்களை அணுகுங்கள்" என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :
இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; "நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.
"இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே.
என் உறக்கம் தொலைந்ததே!
தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!" (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?"
அதற்கு அவள்: "நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்றாள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; "உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?"
அதற்கு அவள்; "அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்" என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; "அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்" என்றார்கள்.
பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை - அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; "என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?"
அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை" என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் - மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.'' (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதற்கான காரணத்தை மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்; "உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் மகளிடமிருந்து நேரடியான விடையை எதிர்பார்த்தார்கள். தம் மனைவியைப் பொறுத்தவ்ரை, கேட்பது அவருடைய கணவன் என்பதால் மனைவியின் விடை பாரபட்சமாக அமையக்கூடிய வாய்ப்புண்டு என கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு எண்ணினார்கள். (நூல்: அல்-இஃபாதாத் அல்-கவ்மிய்யா 2:300)
எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு? ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.
எனினும், இஸ்லாம் எல்லாவற்றிர்க்கும் வழிகாட்டும் மார்க்கமல்லவா? வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் சமநிலைப்பேண ஊக்குவிக்கிறது. ஏனெனில் நடுநிலைப் பாதையே மிகச்சிறந்த பாதை. இஸ்லாத்தின் அணைத்துப் போதனைகளிலும் சமநிலைப்போக்கு கலந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அளவுக்கதிகமான உடலுறவும் சரி, உடலுறவை முற்றிலும் துறப்பதும் சரி இரண்டுமே அறிவான செயலல்ல.
அறிஞர்களில் சிலர் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். இது சமநிலைப்போக்கின் வட்டத்துக்குள் அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் மேற்கொள்ளும் ஆதாரம்:
அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;"எவர் வெள்ளிக்கிழமையன்று (தன் மனைவியை) குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்துவிட்டு, (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரத்திலேயே புறப்பட்டு, வாகனத்தில் செல்லாமல் நடந்துசென்று, இமாமுக்கு அருகில் உள்ளதொரு இடத்தில் அமர்ந்து, கவனமாக அவரை செவியேற்று, வீண் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறாரோ, அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஓராண்டு காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்" (ஆதாரம்: அபூதாவூத் 349, நஸாஈ 1381). அபூதாவூதின் சொற்களே இங்கு இடம்பெற்றுள்ளன.
இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மன் கஸ்ஸல" எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். இதன் நேரடி மொழி பெயர்ப்பு, "இன்னொருவரைக் குளிப்பாட்டும் ஒருவர்" அல்லது "இன்னொருவரைக் குளிக்கச் செய்விக்கும் ஒருவர்". இந்த வாசகத்தை இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுனன் அல்-நஸாஈயிற்கான தம்முடைய விரிவுரையில் இவ்வாறு விளக்குகிறார்கள்; "கஸ்ஸல (மாற்றொருவரைக் குளிப்பாட்டுதல் அல்லது குளிக்கச்செய்வித்தல்) என்பதன் (உட்)பொருள், ஒருவர் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குச் செல்லுமுன் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் இது, வழியில் அவருடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்ள உதவும்..." (ஸுனன் அல்-நஸாஈ பி ஷரஹ் அல்-ஸுயூத்தி 3:95)
இதன்படி, இந்த நபிமொழியின் பொருள்களுல் ஒன்று, எவர் வெள்ளிக்கிழமையன்று தம் மனைவியுடன் உடலுறவுக் கொண்டு பின் தானும் குளித்து, தன் மனைவியையும் குளிக்கச்செய்வித்து, கூறப்பெற்றுள்ள பிற செயல்களை நடைமுறைப்படுத்துகின்றாரோ, அவருக்கு, அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஒரு வருட காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்.
அதற்காக வாரம் ஒருநாள் தான் உடலுறவுகொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுவதாக தப்பர்த்தம் கொண்டுவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குமுன் மனைவியுடன் உடலுறவு கொள்வது சிறந்ததது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.
சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.
அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;
"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)
விஞ்ஞான ரீதியாகும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலூறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.

பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு!
உடலுறவு கொண்ட பின் குளிப்பதற்கும்கூட நன்மை
உடலுறவு கொண்டு "ஜனாபத் குளியல்" குளிப்பதில் கூட நன்மைகளை அள்ளித்தருகிறது இஸ்லாம்.
"ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை.பேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)
மற்றோர் நபிமொழியில்,
"எவரொருவர் உளூச்செய்து பின்பு(ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால்குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)
இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.
மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் திண்ணக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.
இதன்வாயிலாக இன்னொரு விஷயமும் விளங்குகிறது... உடலுறவை அலட்சியம் செய்கின்றவர்கள் "ஜனாபத்" குளியலால் கிடைக்கும் நூற்றுக்கணக்கான நன்மைகளையும் இழக்கிறார்கள். (இதை படிக்கும் வாசகர்கள், அடேங்கப்பா! இப்படியெல்லாமா இஸ்லாம் சொல்கிறது? இவ்வளவுநாளும் இது பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே, நன்மைகள் சம்பாதிக்க இப்படியொரு வழியிருக்கிறதா...? இனிமேல் இதை மிஸ்ஸ் பண்ண மாட்டோம் என்று முடிவெடுத்தீர்களானல் அதுதான் இந்த கட்டுரை எழுதியதற்கான பலன்!)
அடுத்து இஸ்லாம் அனுமதிக்கும் எந்த செயலை செய்தாலும் நன்மை நிச்சயம் உண்டு எனும் அதே வேளையில் அந்த செயலை முறையாக செய்தால் நன்மைகள் இன்னும் அதிகமுண்டு என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதும் நன்மையான காரியம் எனும்போது அந்த உடலுறவு இருவருக்குமே நிம்மதியளிக்கும் விதத்தில் அமையும்போது இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?! இப்போது ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிந்திருக்கும். தம்பதிகள் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்போது தன்னுடைய சுகத்தை மட்டும் பாராமல் தனது இணைக்கும் உடலுறவின்மூலம் முழு திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் அது இருவருக்கும் முழு நிம்மதியளிக்கக்கூடிய செயலாக அமையும்.
மனங்கள் அமைதிபெரும் பொருட்டே உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறானே அந்த மன நிம்மதி உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால் உடலுறவின்மூலம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கும் அதே சமயம் உங்கள் துணைவிக்கும் முழு சுகத்தைக் கொடுத்து அவளது மனமும் அமைதியடைந்தாலே அது பரிபூரணமான தாம்பத்யம். அப்படிப்பட்ட தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயமாக உண்டு. என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இதற்கு ஆதாரத்தை உங்கள் எதார்த்தமான வாழ்க்கையிலேயே காணலாம்.
எப்படி என்கிறீர்களா...?
(தொடரும்)
No comments:
Post a Comment