அல்லாஹ்வும் ஆன்மிகவாதமும்
அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.
போலந்துக்காரர் கோபர் நிகஸ்(1473-1543)பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்? இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட கியார்டனோ புரூனோ (1548-1600)என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.டைகோ பிராகே (1546-1601)என்பவர் தனது 20வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642),கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும்,பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.
சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது,சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர்,தங்களது தவறான கோட்பாட்களுக்கும்,விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர்.அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.
உலக வாழ்வின் பிரதிபலன், மண்ணறையில் முன்கர், நக்கீர் என்ற இரு மலக்குகளின் விசாரணையிலிருந்து துவங்குகிறது. அவர்களது எளிமையான கேள்விகளுக்கு சரியான பதில் கூறியவர்களுக்குப் பரிசாக மண்ணறை 70 முழம் விரிவடைந்து பிரகாசிக்கும். அவர்களிடம் மணமகனைப்போல உறங்கு எனக் கூறப்படும்.
சரியான பதிலளிக்கத் தவறியவர்களின் மண்ணறைகள் இருண்டு, அவர்களது விலா எலும்புகள் ஒன்றோடொன்று இணையுமளவிற்கு நெருக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரைத் தொடரும்.
உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள். நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள, வாளின் முனையைவிட கூர்மையான, முடியை விட மெல்லிய “ஸிராத்” என்ற பாலத்தைக் கடக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விடுவார்கள். மற்றவர்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அல்லாஹ்வின் முன்னே நிறுத்தப்படுவார்கள். என்ற அவர்களது செயல்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப, வலக்கரத்திலும், இடக்கரத்திலும் வழங்கப்படும் “மீஸான்” என்ற தராசில் அவர்களது செயல்கள் பற்றி பதிவு புத்தங்கங்கள் எடை போடப்படும்.
எடைபோடப்பட இருப்பவைகள் நன்மை தீமைகள் பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டுமல்ல வேறு சில பொருட்களும் உள்ளன.
புஹாரி ஹதீஸ் எண் : 2853
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் எவர் அல்லாஹ்வின் பாதையில் (புனிதப் போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டி வைக்கின்றாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும் அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும்,அதன் சாணமும் அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும் தராசில் அவரது நற் செயல்களின்) தட்டில் (வைத்து எடை) போடப்படும்.
இன்றைய காலத்தில் குதிரைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது என்பதை நாம் அறிவோம். குதிரை என்று ஹதீஸில் குறிப்பிடப்படுவதைப் போர்க்களத்தில் பயன்படும் வாகனங்களைக் குறிப்பிடுகிறதெனில், இன்றைய ஜிஹாதிகளுக்காக நாளை மறுமையில் எடைபோடத் தயாராக இருப்பவைகளாவன, போர்விமானம், போர்க்கப்பல், பீரங்கிகள் மற்றும் இதர வாகனங்கங்களின் எரி பொருட்களும், உயவு எண்ணெய், மசகு பொருட்களும், வாகனங்களின் உதிரி பாகங்களும் கழிவுகளாகவும்தான் இருக்க முடியும். அல்லது நன்மையை அதிகமாக்கிக் கொள்ள குதிரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையிலிருந்து அது செய்ததும் இன்னும் தீமையிலிருந்து அது செய்ததும் தன் முன்னே கொண்டு வரப்பட்டதாகக் காணும் நாளில் …
(குர்ஆன் 3::30)
ஒவ்வொரு ஆத்மாவும் விசாரணையை சந்திக்க வேண்டுமா? எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக விசாரணை செய்தால் ரகசியமாக செய்த தவறுகள் எல்லோருக்கும் தெரிந்து நாம் இழிவடைந்து விடுமே என்று முஸ்லீம்கள் கவலையடையத் தேவையில்லை மறுமையில் ரகசிய விசாரணைகளும் உள்ளது.
புஹாரி ஹதீஸ் : 4685
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது
(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, அபூ அப்திர்ரஹ்மானே அல்லது இப்னு உமரே (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார். அல்லது இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார், அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன் என்று கூறுவான்.…
இந்த விசாரணைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?
முஸ்லீம் ஹதீஸ் எண் : 317, அத்தியாயம்: 1, பாடம்: 1.94,
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறியபோது (உக்காஷா எனும்) ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று சொன்னார்கள்.
விசாரணையிலிருந்து எழுபதாயிரம் பேர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். மனிதர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிக மிக குறைவான எண்ணிக்கையே. சொர்க்கத்திற்கு செல்ல வேறு குறுக்கு வழிகள் ஏதேனும் உள்ளதா?
நடைமுறை வாழ்வில் பரிந்துரை தவிர்க்க முடியாததொரு செயல். பரிந்துரை செய்வதும், பரிந்துரைக்கப்படுவதும் நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பரிந்துரைகளால் ஏற்படும் தீய விளைவுகளையும் மறுப்பதற்கில்லை. தகுதியற்றவர்களுக்குச் செய்யப்படும் பரிந்துரைகளால் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். சிபாரிசுகளால் தண்டனைகளின் பிடியிலிருந்து தப்பித்தவர்களின் பட்டியல் நீளமானது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் இத்தகைய உதவிகள் மரணத்திற்கு பின்னும் தொடருமா? பரிந்துரைகளால் நரக தண்டனகளிலிருந்து தப்பிக்கவும் சொர்க்கத்திற்கு செல்லவும் முடியுமா?
குர்ஆன் என்ன சொல்கிறது?
இன்னும் எந்த ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவிற்கு எந்தப் பலனையும் அளிக்க முடியாத அதற்காக எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத இன்னும் அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்களே அத்தகைய (கியாமத்) நாளை பயந்து கொள்ளுங்கள்
(குர்ஆன் 2::48)
ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவைத் தொட்டும் எதையும் பலனளிக்காத அதற்கு எவ்விதப் பரிந்துரையும் பலன் தராத இன்னும் அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்களே – அந்த மறுமை நாளை நீங்கள் அஞ்சுவீர்களாக
(குர்ஆன் 2:123)
முஃமின்களே ! கொடுக்கல் வாங்கலும் நட்புறவும் பரிந்துரையும் (எந்த நாளில் பலன்) இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன்…
(குர்ஆன் 2:254)
…அவனன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் எந்த பரிந்துரை செய்பவனும் இல்லை
(குர்ஆன் 6:51)
அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு (உதவி) எதனையும் செய்யச் சக்தி பெறமாட்டாது. அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே சொந்தம்.
(குர்ஆன் 82:19)
பரிந்துரைகள் பலனளிக்காதா? மறுமை வாழ்வில் பரிந்துரைகளால் அல்லாஹ்வின் தீர்ப்பை மாற்ற முடியாதா?
எந்த பரிந்துரையாளனும் இல்லையென்று உறுதியாகக் கூறிய பின்னரும் என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது? என்று ஆத்திரப்பட வேண்டாம். அல்லாஹ்வின் முன் பேசவும், பரிந்துரை செய்து கொடிய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றவும் சக்தி பெற்றவர்கள் இருக்கிறார்கள். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதில் உறுதியாகவும் இருக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.
முஸ்லீம் ஹதீஸ் : 289, அத்தியாயம் : 1, பாடம் : 1.85,
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).
“சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதன் நானாவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவனும் நானாவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
பரிந்துரைத்தலைப்பற்றி கூறும் ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்களுக்கு எதிரானவைகள் அல்ல. மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதை உறுதி செய்யும் குர்ஆன்வசனங்கள் சில…
…அவனுடைய அனுமதிக்குப் பின்னால் அல்லாமல் (அவனிடம்) பரிந்துரை செய்பவர் எவருமில்லை
(குர்ஆன் 10:3)
யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …
(குர்ஆன் 34:23)
அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவருக்கு (அவருடைய) சொல்லைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (எவருக்கும்) பரிந்துரை பலனளிக்காது
(குர்ஆன் 20:109)
பரிந்துரை செய்வதற்கு மலக்குகளும் உள்ளனர் எனக் கூறும் குர்ஆன் வசனங்கள்,
அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர (வேறு எவர்க்கும்) அவர்கள் (மலக்குகள்) பரிந்துரை செய்யமாட்டார்கள்
(குர்ஆன் 21:23)
மேலும் வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர்; அவர்களுடைய பரிந்துரை அல்லாஹ் எவரை நாடி திருப்தியும் கொண்டானோ அவருக்கு அனுமதியளித்த பின்னரே தவிர எதையும் பலன் தராது.
(குர்ஆன் 53:26)
கொடுக்கல் வாங்கலும், நட்புறவும் பரிந்துரையும் பலனளிக்காத நாள் இருக்கிறது, அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை எந்த பரிந்துரையாளனும் இல்லை என்றெல்லாம் கம்பீரமாக முழக்கமிட்ட குர்ஆன் வசனங்கள் இப்பொழுது அர்த்தமற்றதாகத் தெரியவில்லையா?
குழப்பம் இத்துடன் முடியவில்லை
உதவி தேடி வரும் அடியார்களின் கூட்டத்திற்கு எல்லா நபிமார்களும் பரிந்துரை செய்ய இயலாமல் கவலையால் தவித்து மற்ற நபிமார்களை நாடிச் செல்லுமாறு கூறுவார்கள், இறுதியில் என்னிடம் (முஹம்மது நபியிடம்) வருவார்கள் அப்பொழுது (ஒரு முறை அல்ல) நான்கு முறை பரிந்துரை செய்து மிகக் குறைந்த அளவு நம்பிக்கை உடையவார்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிறார். அல்லாஹ்வின் தீர்ப்பு பரிந்துரைகளால் திருத்தப்படுவதற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகளை முஹம்மது நபி விவரிக்கிறார். (பெரிய ஹதீஸ்தான் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேறு வழியில்லை)
புகாரி ஹதீஸ் : 7510
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
…அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், “அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும், “தற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும், “அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “நான் அதற்குரியவன்தான்” என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதிய ளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ் மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதய மாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள். உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள், எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள் உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம், என்று சொல்வேன். அப்போது, “செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் அணுவளவு, அல்லது, கடுகளவு, இறை நம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப் படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலை களைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் ளஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், “(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூ கலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும் ” என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம், “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை” என்று கூறினோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது) வரை வந்தபோது ஹஸன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நாங்கள், “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை” என்று சொன்னோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக்கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்காரனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரைசெய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! (உலகில்) லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற் குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக” என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக ! லா இலாஹ இல்லல்லாஹ், என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்” என்று சொல்வான்.
பரம ரகசியமானதாக கூறுப்படும் தீர்ப்பு நாளின் நிகழ்வுகள், திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே வெளியான திருட்டு VCD மாதிரி ஆகி விட்டதே !
மறுமை நாளில் இப்ராஹிம் நபிக்கும், உருவவழிபாடு செய்தவரான அவரது தந்தையாருக்குமிடையே நடைபெற இருக்கும் உரையாடலையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைப் பற்றியும் முஹம்மது கூறுவதை கவனியுங்கள்.
புஹாரி ஹதீஸ் எண் :3350
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்கு தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹிமே! உங்கள் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும் பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
நரகத்திலிருந்து இறுதியாக வெளியேறுபவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே நடைபெறும் உரையாடலையும் முன்னறிவிப்பு செய்கிறார்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 274, அத்தியாயம்: 1, பாடம்: 1.83,
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
“இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, ‘நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை) வன் உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ் எனக்கு வழங்கினான்!’ என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், ‘என் இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழப் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், ‘இல்லை; வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!’ என்று வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.
பின்னர், முதலில் காட்டப் பட்ட மரத்தை விட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் காணும்) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று அல்லாஹ் கேட்பான். அவர், ‘வேறெதையும் கேட்க மாட்டேன்’ என்று (மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு (இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.
பிறகு முதலிரண்டு மரங்களை விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் கண்ட) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்; என் இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், ‘என் இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!’ என்று கேட்பார். அதற்கு இறைவன், ‘ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
குறிப்பு:
இதை அறிவித்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று மக்களைக் கேட்டார்கள். அப்போது மக்கள், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இவ்வாறுதான் (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அகிலத்தின் அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.
முஹம்மதுவை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்க மறுத்தவர்களுக்கு தனது பரிந்துரை எவ்வித பலனும் அளிக்காது என்கிறார்.
முஸ்லீம் ஹதீஸ் : 305, அத்தியாயம்: 1, பாடம்: 1.89,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:114)ஆவது இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குறைஷிக் கூட்டத்தாரே! (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) உங்களை நீங்களே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருவேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன்” என்று சொன்னார்கள்.
ஆனால் முஹம்மதுவை அல்லாஹ்வின் துதூதரென்று மறுத்த அவரது பெரிய தகப்பனார் அபூதாலிப் அவர்களது நிலையைப் பற்றி கூறுவதைப் பாருங்கள்,
முஸ்லீம் ஹதீஸ் : 308, அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
“அல்லாஹ்வின் தூதரே! தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்த அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, “ஆம்; (செய்தேன். அதனால்) அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையேல் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
முஸ்லீம் ஹதீஸ் : 309, அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
“அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?” என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; அவரை நான் நரகத்தின் மையப் பகுதியில் கண்டேன். எனவே, அவரை(க் கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பின் பகுதிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்” என்று கூறினார்கள்.
(மண்ணறையிலிருந்து அபூதாலிப்எழுப்பப்பட்டு விட்டாரா? அவருக்கு மறுமை நாளின் விசாரணை முடிந்து,நரகத்திற்கும் சென்று விட்டாரா…!?அப்படியானால், ஏற்கெனவே ஒரு கூட்டம் விசாரணையை சந்தித்து விட்டது. முன் சென்றவர்கள் மண்ணறையில்தான் இருப்பார்கள் என்றும்,இறுதித்தீர்ப்பு நாள் இதுவரை நிகழவில்லை என்றும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)
மறுமை நாளின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் முன்கூட்டியே அறிந்ததெப்படி? தன்னுடைய மனைவி ஆயிஷாவின் கற்பின் மீது அவதூறு கூறப்பட்ட பொழுது, உண்மையை அறிய முடியாமல் ஒரு மாத காலம் திணறியவர் மறுமையின் உரையாடல்களைக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?
ஷஃபியாவின் கணவன் கினானா, மறைத்து வைத்திருந்த நகைகள் அடங்கிய தோல்பை இருக்குமிடம் தெரியாததால், அதை அறிவதற்காக, கினானாவை சித்திரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டவர் சொர்கத்திற்குள் இறுதியாக நுழைபவரின் புலம்பலைக்கூட மிகத் துள்ளியமாக கூறுவது மிகப்பெரிய அற்புதமாகும். இத்தகைய முஹம்மது நபி தன்னைப்பற்றி கூறும்பொழுது,
…மறைவானதை நான் அறிந்தவனாக இருந்தால் நன்மையிலிருந்து (எனக்கு) அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; …
(குர்ஆன் 7: 188)
I am a Prophet of Allah but I do not know what will be my end.
Sahih Bukhari, Chapter “Al-Janaiz”
தன்னுடைய முடிவைப் பற்றியே தனக்கு தெரியாது என்று கூறுபவர் இறுதித் தீர்ப்பு நாளின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூறுவது வேடிக்கையிலும் மிகப் பெரிய வேடிக்கை. மிகச்சிறிய கடுகின் எடையை விட சிறிய அளவு ஈமான் உடையவர்களும் முஹம்மது நபியின் பரிந்துரை காரணமாக நரகத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிந்த பிறகும், மறைவானது, பயங்கரமானது, என்றெல்லாம் குறிப்பிடப்படும் தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கும் குர்ஆன் வசனங்களில் எவ்வித அர்த்தமுமில்லை. ஏனென்றால் இந்த அளவிற்குக் கூட மிகச் சிறிய நம்பிக்கையில்லாதவர் முஸ்லீமாகவே இருக்க முடியாது.
சரி,
அல்லாஹ்வின் தீர்ப்பைத் திருத்தும் வல்லமைமிக்க பரிந்துரை யாருடையது?
(Sahih Al-Bukhari, Volume 2, Book 24, Number 553)
… The Prophet added, “Then the prophets and Angels and the believers will intercede, and (last of all) the Almighty (Allah) will say, ‘Now remains My Intercession.’ He will then hold a handful of the Fire from which He will take out some people whose bodies have been burnt, and they will be thrown into a river at the entrance of Paradise, called the water of life …
தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை, தனக்குத் தானே பரிந்துரைகளையும், வேண்டுகோள்களையும் முன் வைத்து தீர்ப்புகளை திருத்திக் கொள்கிறான் எனக் கூறும் இந்த ஹதீஸ் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அளவிற்கு அல்லாஹ்வின் சிந்தனைமையத்தில் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா?
நாம் பரிந்துரையைத் தொடர்வோம்.
…அவன் அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவன் முன்னால் உள்ளவற்றையும் பின்னால் உள்ளவற்றையும் அறிவான்.
(குர்ஆன் 2:255)
யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …
(குர்ஆன் 34:23)
அல்லாவின் அனுமதியுடன் செய்யப்படும் பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்படும் என்ற, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துகளில் உள்ள தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காண்போம். மறுமையில் தங்களாகவே வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய பரிந்துரையும் தேவையற்றது. தோல்வியடைந்தவர்களுக்கே பரிந்துரை தேவைப்படுகிறது. அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாமல் நரக தண்டனையை பெற்ற ஒரு முஸ்லீம், நல்ல முஸ்லீம் ஒருவரின் பரிந்துரையால் மன்னிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மனிதர்களின் பரிந்துரைகளைக் கேட்ட பிறகு மன்னிப்பதற்கு பதிலாக முதலிலேயே அல்லாஹ்வே மன்னிப்பை வழங்கியிருக்க முடியுமே? அளவற்ற அருளும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வைவிட மனிதர்கள் இரக்க குணமும், மன்னிக்கும் இயல்புடையவர்களா?
அல்லாஹ்வும், அற்ப மனிதர்களின் பரிந்துரையை ஏற்று, “ஓ மானிடனே உனது பரிந்துரையை ஏற்று அவனை நான் மன்னித்து நரகத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்று கூறி தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுகிறான் என்றால், முதலில் கூறிய தீர்ப்பு சரியாக விசாரணை செய்யாமல் வழங்கப்பட்ட தவறானதா? முதலில் கூறிய தீர்ப்பு சரியானதுதான் என்றால் எதற்காக மாற்ற வேண்டும்? பரிந்துரைகளால் தன்னுடைய தீர்ப்புகள்! மாற்றமடையும் என்பது அல்லாஹ்விற்கு முன்பே தெரியாதா? அவனது தீர்ப்பை மாற்றியமைக்கும் அளவிற்கு மனிதர்களால் என்ன கூற முடியும்? அற்ப மனிதர்கள் தங்களது பரிந்துரையில் கூறப்போவது என்னவென்று அவனுக்கு முன்பே தெரியுமென்றால் மனிதனிடம் பரிந்துரை கேட்க வேண்டிய அவசியமென்ன?
முஸ்லீமான ஒரு மனிதரின் மீது செய்யப்படும் இத்தகைய விசாரணைகளும் பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? உதாரணத்திற்கு, அவரது பட்டோலைகள் பரிசோதனை செய்யவும், அதை எடை போடவும், அவரது செயல்களின் கோப்புகள் அவருக்குக்கு காட்சிகளாகவும், வாதங்களாகவும் காண்பிக்கப்படவும், விசாரணைகளும், பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகலாம் என்று வைத்துக் கொள்வோம். இது விரைவான நீதி என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. இன்றைய மக்கள் தொகையின்படி சுமார் 150 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். முன் சென்றவர்களும் இனி பிறக்க இருப்பவர்களையும் சேர்த்து தீர்ப்பு நாளின்போது 500 கோடி முஸ்லீம்கள் இருப்பதாகவும் மாற்றுமதத்தினர் எவ்வித விசாரணையுமின்றி நரகத்தில் எறியப்பட்டதாகவும் வைத்துக் கொள்வோம் (வாதத்திற்காக).
அல்லாஹ்வின் நீதிமன்றம் எவ்வித இடைவேளையும் இன்றி இயங்குவதாகக் கொண்டாலும், தீர்ப்பு வழங்கும் பணி நிறைவடைய 25000000000 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதாவது கடைசி முஸ்லீம் தன்னுடைய தீர்ப்பைப் பெறுவதற்கு 47,564 ஆண்டுகள் ஆகும். சராசரியாக 60 – 70 ஆண்டுகள் வாழ்ந்த உலக வாழ்க்கையின் பிரதிபலனை அறிந்து கொள்வதற்கு, தலைக்கு ஒரு முழ உயரத்தில் உதிக்கும் சூரியனின் வெப்பத்தின் காரணமாக உண்டான வியர்வை குளத்தில், காது வரை மூழ்கிய நிலையில் நிர்வாணமாக சுமார் 47,564 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் நீதீமன்றத்திற்கு தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளும் வார விடுமுறைகளும் இருக்குமானால் மேலும் சில ஆயிரம் ஆண்டுகள் வரிசையில் நிற்க வேண்டும். முஸ்லீம் அல்லாதவர்கள் மீதும் விசாரணை இருக்கின்றதென்றால் மேலும் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரிசையில் “மணியை” ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும். இது முட்டாள்த்தனமாக தோன்றவில்லையா?
பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்பட்டாலும் அல்லது இல்லையென்றாலும் கவலையில்லை. நம் மீது கூறப்படும் தீர்ப்புகளுக்கு நம்முடைய செயல்கள் எந்த அளவிற்கு காரணிகளாக அமைகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சொர்க்கவாசியாவதும், நரகவாசியாவதும் தாயின் வயிற்றில் நாற்பது நாள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது.
புஹாரி ஹதீஸ் : 3332
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
….இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸின் கருத்தை உறுதி செய்யும் விதமாக குர்ஆனிலிருந்து ஒரு சில வசனங்கள்,
நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி விட்டது.
(குர்ஆன் 32:13)
(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.
(குர்ஆன் 11:119)
எவன் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ நெருப்பிலுள்ள அத்தகைய ஒருவனை நீர் ஈடேற்றிவிடுவீரோ?
(குர்ஆன் 39:19)
விதியின் வலிமையைக் கூறும் குர்ஆனின் (39:19) இந்தக் கேள்வி, விசாரணைகளையும், பரிந்துரைகளையும் முற்றிலும் நிர்மூலமாக்குகிறது. இறுதி செய்யப்பட்ட விதியின் வழியே செல்லும் மனிதனிடம் விசாரணைகளும், பரிந்துரைகளும் எதற்காக? தன்னால் எழுதப்பட்ட விதியை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும் என்கிறானா?
மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படும் என்றால் குர்ஆனின் 2:48, 2:122-123, 2:254,4:123, 6:5, 6:70, 39:43-44, 82:18-19, 17:56-57 வசனங்கள் பொருளற்றவைகளாகின்றன. மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படாது என்றால் பரிந்துரையைப்பற்றி கூறும் குர்ஆனின் 10:03, 34:23, 20:109, 21:23, 53:26 வசனங்களும் ஹதீஸ்களும் அர்த்தமற்றவைகளாகின்றன.
இத்துடன் விதியை வலியுறுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இஸ்லாமியக் கொள்கையும் கேலிகூத்தாகி விடுகிறது. ஒன்றிற்கொன்று நேர்எதிரான கருத்துகள்.
ஏன் இந்த முரண்பாடுகள்?
சுருக்கமாகச் சொல்வதென்றால், முன்பு கூறியதை மறந்து மறுபடியும் புதிதாக இன்னொன்றை கூறும் குர்ஆனை இயற்றியவரின் நினைவாற்றலின் குறைபாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!
No comments:
Post a Comment