முகம்மதுவின் எச்சில் !!!

உமிழ்தலில் அபிவிருத்தி..


புஹாரி ஹதீஸ்:- 77.
 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்' என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார்.
Volume :1 Book :3
189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்' என இப்னுஷிஹாப் அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்' என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.
Volume :1 Book :4
196. 'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
241. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

3577. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக்கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள்விட்டு வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார்கள். பிறகு, சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்து நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு, நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும்... அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும்... நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம்.
Volume :4 Book :61

6354. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
நான் (நான்கு அல்லது ஐந்து வயது) சிறுவனாக இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் (பரக்கத்திற்காக) உமிழ்ந்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :6 Book :80
6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :7 Book :81


முஸ்லிம் ஹதீஸ்:-

653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.
Book :4
1167. மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
)நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த (கிணறு ஒன்றிலிருந்து) வாளியில் (தண்ணீர் எடுத்துத் தமது வாயில் ஊற்றி என் முகத்தில்) ஒரு முறை (செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
என்னிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது..." என்று தொடங்கி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமை மாவுக் கஞ்சி(யை அவர்கள் பருக வேண்டும் என்ற ஆசை)க்காக அவர்களை இருக்கவைத்தோம்" என்று ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
Book :5

1214. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் இருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பமாட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தியபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள் உடனே "இங்கிருந்து புறப்படுங்கள்" என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் நன்கு பிரகாசித்த பிறகு ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.
அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் "இன்னாரே! நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள், அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளிப்பதற்கு தண்ணீர் இல்லை)" என்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மண்ணில் "தயம்மும்" செய்துகொள்ளுமாறு) உத்தரவிட, அவ்வாறே அவர் மண்ணில் "தயம்மும்" செய்துகொண்டு தொழுதார். பிறகு என்னைத் தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு வேகப்படுத்தினார்கள். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்கவிட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.
நாங்கள் அப்பெண்ணிடம், "தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?" என்று கேட்டோம், அதற்கு அப்பெண், "அது வெகுதொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடையாது" என்றாள். நாங்கள் "உன் குடும்பத்தா(ர் தங்கியி)ருக்கும் (இந்த இடத்திற்கும்) தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?" என்று கேட்டோம். அதற்கு அப்பெண், "ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்" என்று பதிலளித்தாள்.
நாங்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!" என்றோம். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதரா (யார் அவர்)?" என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்கமுடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்திய போது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது ஒட்டகத்தை (மண்டியிடச் செய்யுமாறு) கூற, அவ்வாறே அது மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது.) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அப்போது நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். தாகம்தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த தோல் பாத்திரங்கள், கோப்பைகள் ஆகியவற்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். ஆனால், நாங்கள் எங்கள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் புகட்டவில்லை. (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் நிரம்பியிருந்தது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களிடமுள்ள (உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டி, அவளிடம் "நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, "நான் மனிதர்களில் மிக வசீகரமான ஒருவரைச் சந்தித்தேன். அல்லது அவர் கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதர்தாம். அவரிடம் இப்படி இப்படி (அற்புதம்) நிகழ்ந்தது" என்று கூறினாள். இதையொட்டி அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்த வீட்டார்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
- இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு (நாள்) இரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம் தான் விழிக்கச் செய்தது.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே சிறிது கூடுதல் குறைவு வார்த்தைகளுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த ஹதீஸில் பின்வருமாறும் இடம்பெற்றுள்ளது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள் (உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராயும் நெஞ்சுரம் வாய்ந்தவராயும் இருந்தார்கள்) அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்விழித்தார்கள். விழித்தெழுந்தவுடன் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கத்)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிரச்சினை இல்லை; இங்கிருந்து புறப்படுங்கள்" என்றார்கள்.
Book :5
3695. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு (தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய) ஐம்பது (குர்பானி) ஆடுகள் நீர் புகட்டப் படாமல் (தாகத்துடன்) இருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். அல்லது அதனுள் உமிழ்ந்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக (முதலில்) நானே அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக (வந்து) உறுதிமொழி அளித்தனர்.
மக்களில் பாதிப்பேரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழி வாங்கி) இருந்தபோது "சலமா! உறுதிமொழி அளிப்பாயாக!" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாக தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மீண்டும் (ஒரு முறை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம் ஒன்றை” அல்லது "தோல் கேடயம் ஒன்றை” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.
மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் (உறுதிமொழி பெற்றுக்கொண்டு) இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராகவும் தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
"மீண்டும் (ஒரு தடவை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று சொன்னார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.
பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது "சிறிய தோல் கேடயம்” அல்லது "தோல் கேடயம்" எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். (அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்)" என்று கூறினார்கள்.
பிறகு (மக்கா) இணைவைப்பாளர்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதாக எங்களுக்குத் தூது விட்டார்கள். இதனால், (நாங்களும் அவர்களும்) ஒருவர் பகுதிக்கு மற்றவர் சென்றுவர முடியும். நாங்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக இருந்தேன். அவரது குதிரைக்குத் தண்ணீர் புகட்டுவேன். அதைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அவருக்கு ஊழியமும் செய்வேன். அவர் தரும் உணவை உண்டுகொள்வேன். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எனது குடும்பம், சொத்து (சுகங்)கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நான் நாடு துறந்து (மதீனாவுக்கு) வந்திருந்தேன்.
நாங்களும் மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக்கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.
அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக்கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து "முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)" என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக்கொண்டேன்.
பிறகு "முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்" என்று கூறினேன்.
பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் "அபலாத்” குலத்தைச் சேர்ந்த "மிக்ரஸ்” எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணைவைப்பாளர்களும் இருந்தார்கள்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்" என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
அல்லாஹ் (இது தொடர்பாகவே), "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களிடமிருந்தும், அவர்கள் கைகளை உங்களிடமிருந்தும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை உற்றுநோக்குபவனாக இருக்கின்றான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு நாங்கள் மதீனாவை நோக்கித் திரும்பினோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் இறங்கித் தங்கினோம். (அந்த இடத்திலிருந்த) எங்களுக்கும் இணைவைப்பாளர்களான "பனூ லஹ்யான்” குலத்தாருக்கும் இடையே ஒரு மலை மட்டுமே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எதிரிகளைக் கண்காணிப்பதற்காக) இன்றிரவு இம்மலைமீது ஏறுபவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உளவாளி போன்று (அவர் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்). அன்றிரவு நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மலைமீது ஏறினேன்.
பிறகு நாங்கள் மதீனாவுக்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (பால்) ஒட்டகங்களைத் தம் அடிமையான ரபாஹ் (ரலி) அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள். அவருடன் நானும் இருந்தேன். தல்ஹா (ரலி) அவர்களின் குதிரையை ஓட்டிக்கொண்டு, ஒட்டகங்களுடன் அந்தக் குதிரைக்கும் தண்ணீர் புகட்டி மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்புவதற்காக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
காலையில் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரீ என்பான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்களைத் திடீரெனத் தாக்கி, அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டான். அவற்றின் மேய்ப்பாளரையும் கொன்றுவிட்டான்.
உடனே நான், "ரபாஹே! (இதோ) இந்தக் குதிரையைப் பிடித்துச் சென்று, தல்ஹா பின் உபை தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சேர்த்துவிடு. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கால்நடைகளை எதிரிகள் தாக்கிக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துவிடு" என்று கூறினேன்.
பிறகு ஒரு மலையின் உச்சியில் ஏறி மதீனாவை முன்னோக்கி நின்றுகொண்டு, "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)" என மூன்று முறை உரத்த குரலில் கூவினேன். பிறகு அந்தக் (கொள்ளைக்) கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள்மீது அம்பெய்தவனாக விரட்டிச் சென்றேன். அப்போது நான்,
"அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என யாப்புக் கவிதை பாடினேன். பிறகு அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது ஒட்டகச் சேணத்தின் மீது அம்பெய்தேன். அதன் கூர்முனை சேணத்தில் நுழைந்து அவனது தோளில் பாய்ந்தது. நான்,
"இதோ வாங்கிக்கொள்;
அக்வஇன் மகன் நான்;
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று (பாடியபடி) கூறினேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு அவர்கள்மீது அம்பெய்துகொண்டும் அவர்களின் குதிரைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டும் நான் இருந்தேன். என்னை நோக்கிக் குதிரை வீரர் எவரேனும் திரும்பி வந்தால், நான் ஏதேனும் மரத்தை நோக்கிச் சென்று அதற்குக் கீழே அமர்ந்துகொண்டு, அவன்மீது அம்பைப் பாய்ச்சினேன். அவனது குதிரையை வெட்டி வீழ்த்தினேன். குறுகிய மலையிடுக்கு தென்பட்டபோது, அதன் இடுக்கில் அவர்கள் நுழைந்து கொண்டனர். நானும் அம்மலை மீதேறிக்கொண்டு, கல்லால் அவர்களை விரட்டியடித்தேன்.
இவ்வாறு (விரட்டியடித்த வண்ணம்) அவர்களை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ் படைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்கள் அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் அவற்றை என்னிடமே விட்டுவிட்டு விரைந்துகொண்டிருந்தனர்.
பிறகு மீண்டும் அவர்கள்மீது அம்பெய்த வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் (ஓடிய வேகத்தில்) முப்பது சால்வைகளையும் முப்பது ஈட்டிகளையும் விட்டு விட்டு ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொரு பொருள்மீதும் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் அறியும் விதத்தில் ஓர் அடையாளக் கல்லை வைத்துக் கொண்டேபோனேன்.
பிறகு ஒரு குறுகலான மலைக் கணவாய்க்கு அவர்கள் சென்றனர். அங்கு பத்ர் அல்ஃபஸாரீ என்பவனின் மகனிடம் அவர்கள் போய்ச்சேர்ந்து, அமர்ந்து காலை உணவை உட்கொள்ளலாயினர். நான் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அந்த ஃபஸாரீ, "நான் காணும் இந்தக் காட்சிகள் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இதோ இவனிடமிருந்து கடும்துயரத்தை நாங்கள் சந்தித்துவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகாலை இருளிலிருந்து அவன் எங்களை விட்டு விலகவே இல்லை. எங்களை நோக்கி அம்பெய்து எங்கள் கையிலிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டான்" என்று கூறினர்.
அதற்கு அந்த ஃபஸாரீ, "உங்களில் நான்கு பேர் அவனை நோக்கிச் செல்லட்டும்" என்று கூறினான்.
அவர்களில் நான்கு பேர் நானிருந்த மலைமீது ஏறினர். அவர்கள் எனது பேச்சைக் கேட்கும் இடத்திற்கு வந்தபோது,நான், "என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அவர்கள் "இல்லை, நீ யார்?" என்று கேட்டார்கள். "நான் சலமா பின் அல்அக்வஉ. முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் ஒருவரை நான் தேடிப் புறப்பட்டால் அவரை நான் பிடிக்காமல் விடமாட்டேன். (அதே சமயத்தில்) உங்களில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடிப் புறப்பட்டால் அவரால் என்னைப் பிடிக்க முடியாது" என்று நான் கூறினேன். அவர்களில் ஒருவன், "நானும் (அவ்வாறே) கருதுகிறேன்" என்றான்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்கக்கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குதிரைப் படையினர் மரங்களிடையே புகுந்து வருவதை நான் பார்த்தேன். அவர்களில முதல் ஆளாக அக்ரம் அல்அசதீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து மிக்தாத் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் அக்ரம் (ரலி) அவர்களது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டேன். அவர்கள் நால்வரும் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். நான் "அக்ரமே! அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வந்து சேர்வதற்கு முன் (தனியாக வரும்) உம்மை இவர்கள் பிடித்துவிட வேண்டாம்" என்று கூறினேன்.
அதற்கு அக்ரம் (ரலி) அவர்கள், "சலமா! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவராயிருந்தால், சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என நீர் அறிந்திருந்தால் எனக்கும் வீர மரணத்துக்குமிடையே குறுக்கிடாதீர்!" என்று கூறினார்.
ஆகவே, அவரை நான் விட்டுவிட்டேன். அவரும் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரியும் (வாள் முனையில்) சந்தித்துக்கொண்டனர். அக்ரம் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானின் குதிரையை வெட்டிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான்,அக்ரம் (ரலி) அவர்கள்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவர்களைக் கொன்றுவிட்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! பிறகு நான் காலால் நடந்தே அவர்களைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களையோ,அவர்களது (குதிரை கிளப்பிய) புழுதியையோ நான் பார்க்கவில்லை.
இறுதியில் அ(ந்தப் பகை)வர்கள் சூரியன் மறைவதற்கு முன் ஒரு கணவாயை அடைந்தனர். அங்கு ஒரு நீர்நிலை இருந்தது. அதற்கு "தூ கரத்” எனப் பெயர் சொல்லப்பட்டது. அவர்கள் தாகத்துடன் இருந்ததால் அதில் நீர் அருந்தச் சென்றனர். தங்களுக்குப் பின்னால் நான் ஓடி வருவதை அவர்கள் கண்டதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர். அவர்கள் ஒரு துளி நீரைக்கூட சுவைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலைக் குன்றில் விரைந்து சென்றனர். நான் வேகமாக ஓடி அவர்களில் ஒருவனைச் சென்றடைந்தேன். அவனது தோள் பட்டையிலுள்ள மெல்லிய எலும்பின் மீது,
"இதோ இதை வாங்கிக்கொள்
அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று கூறியவாறு ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அவன், "உன் தாய் உன்னை இழக்கட்டும்! காலையில் வந்த அக்வஆ நீ?" என்று கேட்டான். நான் "ஆம். தனக்குத் தானே பகைவன் ஆகிவிட்டவனே! காலையில் சந்தித்த உன் அக்வஉதான் நான்" என்றேன்.
அக்கூட்டத்தார் ஒரு மலைக் குன்றின் மீது இரு குதிரைகளை விட்டுவிட்டு ஓடி விட்டனர். நான் அவ்விரு குதிரைகளையும் பிடித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓட்டி வந்தேன்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்கள் தோல் அடுக்குப் பாத்திரம் ஒன்றை என்னிடம் கொண்டுவந்தார். அதில் தண்ணீர் கலந்த பால் சிறிதளவு இருந்தது. இன்னொரு தோல் அடுக்குப் பாத்திரமும் அவரிடம் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. நான் அங்கத் தூய்மை (உளூ) செய்தேன்; அருந்தினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அக்கூட்டத்தாரை நான் விரட்டியடித்த நீர்நிலை அருகில் அவர்கள் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களையும் அந்த இணைவைப்பாளர்களிடமிருந்து நான் கைப்பற்றிய ஈட்டிகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்கள், அக்கூட்டத்தாரிடமிருந்து நான் விடுவித்த ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் ஈரலையும் திமிலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பொரித்துக்கொண்டிருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் (நம்) மக்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து (அழைத்துக்கொண்டு) அக்கூட்டத்தாரைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அவர்களில் இறப்புச் செய்தி அறிவிக்கக்கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அங்கிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரிந்தன. அப்போது அவர்கள், "சலமா! உன்னால் அதைச் செய்ய முடியும் என நீ கருதுகிறாயா?"என்று கேட்டார்கள். நான் "ஆம் (செய்வேன்), தங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்போது அக்கூட்டத்தார் ஃகத்ஃபான் பகுதியில் விருந்து அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று (இறையறிவிப்பின் மூலம்) கூறினார்கள்.
அப்போது ஃகத்ஃபான் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர் "அக்கூட்டத்தாருக்காக இன்ன மனிதர் இறைச்சி ஒட்டகமொன்றை அறுத்(து விருந்தளித்)தார். அவர்கள் அந்த ஒட்டகத்தின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது (பாலைவன வெளியில்) புழுதி கிளம்புவதைக் கண்டனர். உடனே "அக்(குதிரைப் படைக்) கூட்டம் வந்துவிட்டது” என்று கூறியவாறு வெருண்டோடிவிட்டனர்" என்று கூறினார்.
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்.
பிறகு தமது "அள்பா” எனும் ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் என்னை அமரச் செய்து மதீனா நோக்கித் திரும்பினார்கள்.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது (ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.) அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை ஓட்டப்பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியாது. அவர், "மதீனாவரை என்னுடன் போட்டியிட்டு ஓடுபவர் யார்? போட்டியிட்டு ஓடுபவர் யார்?" என்று திரும்பத் திரும்பக் கூறலானார்.
அவரது குரலைக் கேட்ட நான் (அவரிடம்), "மரியாதைக்குரியவர்களை நீ மதிக்கமாட்டாயா? சிறப்புக்குரியவர்களை நீ அஞ்சமாட்டாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாக இருந்தால் தவிர" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை விடுங்கள்; அந்த மனிதரை நான் வெல்கிறேன்" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் விருப்பம்" என்றார்கள்.
நான், "முதலில் நீ ஓடு” என்று கூறிவிட்டு, என் கால்களை உதறிவிட்டு, குதித்து ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது, ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மூச்சு வாங்கி ஓய்வெடுத்தேன். பிறகு அவருக்குப் பின்னால் ஓடினேன். மறுபடியும் ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது ஓட்டத்தை மட்டுப்படுத்தினேன்.
பிறகு அவரைச் சென்றடைவதற்காக (மேட்டில்) ஏறினேன். அப்போது அவருடைய தோள்களுக்கிடையே அடித்து, "நீ தோற்கடிக்கப்பட்டாய், அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அவர், "நானும் (அவ்வாறே) எண்ணுகிறேன்" என்று கூறினார். மதீனாவரை அவருக்கு முன்பாகவே நான் ஓடிவந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு வந்த பின்) நாங்கள் மூன்று இரவுகள் மட்டுமே தங்கியிருந்தோம். (நான்காம் நாள்தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்)போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) பின்வரும் யாப்புக் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ் மட்டும் இல்லாவிட்டால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தானதர்மம் செய்திருக்கவுமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்
(இறைவா!) நாங்கள்
உன் கருணையிலிருந்து
தேவையற்றவர்கள் அல்லர்.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது
அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நான் ஆமிர்" என்றார்கள். "உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பருள்வானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டுப் பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீர மரணம் அடையாமல் இருந்ததில்லை.
ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே,
"கைபருக்குத் தெரியும்
நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு
கொழுந்துவிட்டு எரியும்போது
(சில நேரம் நான் ஈட்டியெறிவேன்
சில நேரம் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து,
"கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று
போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று"
என்று பாடினார்கள். பிறகு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர் (ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்டப்போனார்கள். அப்போது அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கிவிட்டது; அவரது கை நரம்பைத் துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
பிறகு நான் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நபித்தோழர்களில் சிலர் "ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டனவா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) யார் சொன்னது?" என்று கேட்டார்கள். "தங்கள் தோழர்களில் சிலர்" என்று பதிலளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்துவிட்டார். அவருக்கு அவரது நன்மை இருமுறை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு கண்வலியுடன் இருந்த அலீ (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னை அனுப்பிவைத்தார்கள்.
(என்னை அனுப்புவதற்கு முன்) "நான் (நாளை) இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். அவர்கள் கண் குணமடைந்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களிடம் இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபரின் மன்னன் மர்ஹப் புறப்பட்டு வந்து,
"கைபருக்குத் தெரியும் நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு கொழுந்துவிட்டு எரியும்போது
(சில வேளை நான் ஈட்டியெறிவேன்
சில வேளை நான் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்,
என் தாயாரால் ஹைதர் (சிங்கம்)
எனப் பெயர் சூட்டப்பட்டவன் நான்
அருவருப்பான தோற்றமுடைய
அடர்வனத்தின் சிங்கம் நான்
சந்தர் எனும் பேரளவையால்
அளப்பதைப் போன்று
அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன்
(ஏராளமான எதிரிகளை
வெட்டி வீழ்த்துவேன்)"
என்று பாடிக்கொண்டே மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபரின்) வெற்றியும் கிட்டியது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :32
4144. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ் (போருக்காகக் குழி) தோண்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு (பசியால்) ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் என் மனைவியிடம் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டியிருந்ததை நான் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டேன்.
உடனே என் மனைவி என்னிடம் ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடித்தபோது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும், அதைத் துண்டுகளாக்கி அதற்கான பாத்திரத்தில் இட்டேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். என் மனைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம் ("நம்மிடம் உணவு குறைவாகவே இருக்கிறது" என்று கூறிவிடுங்கள்)" என்று சொல்லியிருந்தார்.
எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரகசியமாக "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்தோம். எங்களிடம் இருந்த ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை (என் மனைவி) அரைத்து வைத்துள்ளார். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்" என்று அழைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில், "அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நான் வரும்வரை நீங்கள் பாத்திரத்தை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். குழைத்துவைத்துள்ள மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்" என்று கூறினார்கள். நான் என் இல்லத்திற்கு வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக்கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
நான் என் மனைவியிடம் வந்துசேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) "(எல்லாம்) உங்களால்தான்; உங்களால்தான்" என என்னைக் கடிந்துகொண்டார். உடனே நான் "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
பிறகு என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழைத்த மாவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இலேசாக உமிழ்ந்து, பெருக்கம் (பரக்கத்) ஏற்பட பிரார்த்தித்தார்கள். பிறகு (இறைச்சிப்) பாத்திரத்தை நோக்கிச் சென்று, அதில் இலேசாக உமிழ்ந்து பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (என் மனைவியிடம்), "ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக்கொள். உன்னுடன் (சேர்ந்து) அவளும் ரொட்டி சுடட்டும்! உங்கள் (இறைச்சிப்) பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே" என்று கூறினார்கள். அ(ங்கு வந்த)வர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அனைவரும் உண்டுவிட்டு, அந்த உணவை (சிறிதும் குறையாமல்) அப்படியே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் பாத்திரம் முன்பு போலவே (சிறிதும் குறையாமல்) சப்தத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும், நாங்கள் குழைத்த மாவும் (சிறிதும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக்கொண்டிருந்தது.
Book :36

No comments:

Post a Comment